முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் காயங்கள் ஆறவில்லை..! (ரமழான் நோன்பும் வருகிறது)
மார்ச் 2018 இல் கண்டி, திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களின் காயங்கள் இன்னும் ஆறவில்லை அல்லது ஆற்றப்படவில்லை என்றுதான் கூறவேண்டியிருக்கிறது.
'பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள், வீடுகள் மற்றும் கடைகள் சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கு முன்பு புனர்நிர்மாணிக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும் இதுவரை எந்தவொரு பள்ளிவாசலோ, வீடோ, கடையோ புனரமைக்கப்படவில்லை' என்ற குற்றச்சாட்டை கண்டி மாவட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கண்டி மாவட்டக்கிளை முன்வைத்துள்ளது.
ரமழானை நோக்கி முஸ்லிம்கள்
மே மாதம் நடுப்பகுதியில் முஸ்லிம்கள் ரமழான் மாதத்தை எதிர்நோக்கியுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்களும், வீடுகளும் கடைகளும் நோன்புக்கு முன்பு புனரமைக்கப்படவேண்டும் என புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் உலமா சபை கோரிக்கை முன்வைத்துள்ளது.
மார்ச்சில் இனவாதக் கும்பலால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட வன்செயல்களினால் கண்டி, திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் 289 வீடுகள், 17 பள்ளிவாசல்கள் மற்றும் 217 கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. 3 பள்ளிவாசல்கள் முற்றாக எரிக்கப்பட்டுள்ளன. இந்த வன்செயல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வீடுகளையும் தங்கள் பொருளாதாரத்தையும் இழந்தனர்.
வன்செயல்களால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்கள் தொடர்பாக உலமா சபை கண்டி மாவட்டக்கிளை அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிடம் கலந்துரையாடியுள்ளது. உலமா சபையின் கண்டி மாவட்டக்கிளை காரியாலயத்தில் அமைச்சர் ஹலீமுக்கும், உலமா சபை பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மழையால் மக்கள் பாதிப்பு
தற்போது கண்டிப் பகுதியில் தொடராக மழைபெய்து வருவதால் பாதிக்கப்பட்ட மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். வீடுகள் சேதங்களுக்குள்ளாக்கப்பட்டதால் பலர் உறவினர் வீடுகளில் தங்கியிருக்கின்றனர். மேலும் சிலர் இரு மாதகாலத்துக்கே வாடகை வீடுகளைப் பெற்றுள்ளனர். தற்போது வன்செயல் இடம்பெற்று இருமாதகாலம் அண்மிக்கப் போகிறது.
பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள், வீடுகள், கடைகளை ஏப்ரல் 29 ஆம் திகதிக்கு முன்பு புனரமைத்துத் தருவதாக இராணுவத் தளபதி உறுதியளித்திருந்தாலும் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.
கைதுகளும் சட்ட நடவடிக்கைகளும்
கண்டி மாவட்டமெங்கும் இடம்பெற்ற இன ரீதியிலான வன்முறைகளின்போது முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்தி தீ வைத்தமை தொடர்பில் கைதான 32 பேரை எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, இரு பிரதேச சபை உறுப்பினர்களைத்தேடி விசாரணைகள் தொடர்வதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கனவே இரு பிரதேச சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வன்முறைகளின் பின்னணியில் செயற்பட்ட இனவாத சக்திகளும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், இரு பிரதேச சபை உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மாவட்டமெங்கும் இடம்பெற்ற இன ரீதியிலான வன்முறைகளை திட்டம் தீட்டி அரங்கேற்றியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மஹசொஹொன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க, சிங்கள தேசிய சக்தியின் பிரதானி சுரேந்ர சுரவீர, பிக்கு ஒருவர் உள்ளிட்ட 10 பேர் விளக்கமறியலில் உள்ள அதே நேரம் குண்டசாலை பிரதேச சபை உறுப்பினர் அரலிய வசந்த உள்ளிட்ட இரு அரசியல்வாதிகளும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பிரதானமாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 32 பேர் வரை தற்போது விளக்கமறியலில் உள்ளனர். இவர்களில் இராணுவத்தினர் சிலரும் உள்ளடங்குகின்றனர்.
கண்டியை ஆண்ட மன்னர்கள் முஸ்லிம்களுக்கு மிகுந்த மதிப்பளித்தனர். பல ஊர்களை முஸ்லிம்களுக்கு அன்பளிப்பு செய்துள்ளனர். இப்படி தேசிய மரபுரிமை நகராகக் கருதப்படும் கண்டியின் வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்பை சிங்கள மன்னர்கள் மெச்சியிருக்கின்றனர். அவர்களுக்கு அன்று அடைக்கலம் கொடுத்திருக்கின்றனர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கின்றது. சில அரசியல் தலைமைகளினால் முஸ்லிம்கள் மிதிக்கப்படுகின்றன. அவர்களின் ஆசிர்வாதத்துடன் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்படுகின்றன. இனவாதிகள் முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியிருக்கின்றனர். இது ஒரு மோசமான நிலைமையாகும்.
இதனை தடுத்து நிறுத்த சட்டம் இறுக்கமாக்கப்பட வேண்டும். அத்தோடு காயங்கள் ஆற்றப்பட வேண்டும். நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அரசாங்கம் தொடர்ந்தும் தாமதிக்கக் கூடாது. மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியொழுப்ப அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
-Vidivelli
Post a Comment