முஸ்லிம்களுக்கெதிரான சம்பவங்கள், முடிவுற்றுவிட்டதாக எண்ணிவிடலாகாது - ஹஜ்ஜுல் அக்பர்
மஸ்ஜிதுகளை நிர்மாணிக்க செலவிடும் இலட்சக் கணக்கான நிதியைக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் தேவையாக உள்ள தமிழ், சிங்கள ஊடக நிறுவனமொன்றை ஏற்படுத்தலாம் இதன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்குப் பயனுண்டு என்று ஜமாஅத்தே இஸ்லாமி அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தெரிவித்தார்.
ஜமாஅத்தே இஸ்லாமி உக்குவளை கிளையின் சமூகசேவைப்பிரிவு, ‘இன்றைய பாடங்களும் இனியுள்ள கடமைகளும்’ என்ற தலைப்பில் உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலை புதிய பிரதான மண்டபத்தில் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறியதாவது,
அண்மையில் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதிகளின் செயற்பாடுகளால் முஸ்லிம்கள் சேதங்களை எதிர்கொண்டதுடன் அச்ச நிலைமைக்குள்ளானார்கள். கடந்த கால கிரீஸ் மனிதன் விவகாரமும் அவ்வாறானதே. எமது இளைஞர்கள் சம்பந்தப்பட்ட திகன சிறிய சம்பவம் பாரதூரமான சம்பவமாக அமைந்துவிட்டது. முஸ்லிம்களுக்கெதிரான இவ்வாறான சம்பவம் இத்துடன் முடிவுற்றுவிட்டதாக எண்ணிவிடலாகாது. மே-லும் இதற்குக் காரணமானவர்களை விமர்சிப்பதிலும் பயனில்லை. அவ்வப்போது இடம்பெறும் இதுபோன்ற சம்பவங்கள் மூலம் முஸ்லிம் சமூகம் பெற்றுக்கொண்ட பாடம் என்னவென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இனவாதிகளோ மற்றவர்களோ முஸ்லிம்களின் செயற்பாடுகளில் எவற்றைக் கண்டு எரிச்சலடைகிறார்களோ அவற்றையும் அவர்களால் வெளியிடப்படும் பொய்கள், அவதூறுகளையும் இஸ்லாம் பற்றி அவர்கள் கொண்டுள்ள தவறான கருத்துக்கள் என்பவற்றையும் வகைப்படுத்தி அவைகளைச் சீர்ப்படுத்தி நல்ல சூழலை ஏற்படுத்திக் கொள்வதில் காத்திரமான முயற்சிகளை மேற்கொள்வதே இன்றைய நிலைமைக்கான வழியாகும்.
திகன சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பலரும், சில சமூக அமைப்புக்களும் நிவாரணப் பொருட்களைச் சேகரித்து எடுத்துச் சென்று வழங்கினர். எனினும் அவ்வாறான சம்பவங்கள் ஏற்படாதிருக்கும் வகையில் முஸ்லிம்களது ஒன்றித்த மற்றும் நல்லெண்ண பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான சமயோசித செயற்பாடுகள் அமைவதில்லை. முஸ்லிம் சமூகம் சுன்னத்தான விடயங்களுக்கான ஜமாஅத்துக்கள் பிரச்சினைபட்டுக் கொள்ளும் நிலையையும் காணமுடிகிறது.
திகன சம்பவம் பாரியதொரு சம்பவமாக அமைந்தது. இச்சம்பவம் பற்றி ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களால் நம் நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை மறந்துவிடமுடியாது. அந்தளவுக்கு இச்சம்பவம் பிரபல்யமாக்கப்பட்டது. இனவாதிகள் மட்டுமன்றி அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களையும் சிந்திக்க வைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இன்றைய சூழலில் சக்திமிக்கதாக இருப்பது ஊடகங்கள் தான். ஊடகங்களால் மாற்றத்தை ஏற்படுத்தவும் முடியும்
நம் நாட்டில் பல்வேறு பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இயங்குகின்றன. அவற்றில் அவரவர் தகவல்கள், கருத்துக்கள் என இன்னோரன்னவை வெளியிடப்படுவதை பார்த்து மக்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் நமது உண்மைமிக்க கருத்துக்கள், சிந்தனைகள், தகவல்கள் நிலைமைகளை உலகறிய எடுத்துச் செல்வதற்கு ஊடகத்தின் அவசியத்தை விளங்க முடிகிறது. எனவே அதனைக் கருத்தில் கொண்டு மஸ்ஜிதுகளை நிர்மாணிக்கச் செலவிடும் இலட்சக் கணக்கான நிதியைக்கொண்டு முஸ்லிம் சமூகத்துக்கு அவசியத் தேவையான தமிழ் சிங்கள ஊடக நிறுவனமொன்றை ஏற்படுத்துவது முஸ்லிம் சமூகத்துக்குப் பயன்தரும். அது பத்திரிகையாக, தொலைக்காட்சியாக இருக்கலாம்.
முஸ்லிகளுக்கு அல்லாஹ் நல்ல வளங்களை வழங்கியுள்ளான். அத்துடன் நம்மில் படித்தவர்கள், கல்விமான்கள், துறைசார்ந்தவர்கள், விற்பன்னர்கள், எழுத்தாளர்கள், பணவசதியுள்ளவர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், திறமைசாலிகள் மற்றும் அரசியல்வாதிகள் என நிறையவே இருக்கின்றனர். அதற்காக இவர்களது பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம். தேவையாயின் அதற்கான பயிற்சிகளையும் வழங்கி அவர்களை ஊக்குவிக்கலாம் திட்டமிட்டுச் செயற்பட்டால் முடியாதது எதுவுமில்லை என்றார்.
மிகவும் அவசியமான விடயம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் சமூகம் கவனத்தில் எடுத்து அவசரமாக இந்த விடயத்தை முன்னெடுக்க வேண்டும்.
ReplyDeleteகடந்த 30 வருடங்களாக பேசி வரக்கூடிய முஸ்லீம் ஊடக விடயம் தற்போது சாத்தியப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது .
ReplyDelete