மலேசியாவில் பலஸ்தீன விரிவுரையாளரைக் கொன்றவர்கள், விலை செலுத்த வேண்டிவரும் - ஹமாஸ்
-M.I.Abdul Nazar-
மலேசியாவில் பலஸ்தீன விரிவுரையாளரும் மின்சாரப் பொறியிலாளருமான பாதி மொஹமட் அல்-பத்ஷ் படுகொலையின் பின்னாலுள்ள அனைத்துக் காரணங்களையும் கண்டறியாமல் விடமாட்டோம் என பலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியாஹ் தெரிவித்துள்ளார்.
அல்-பத்ஷை படுகொலை செய்தவர்கள் அதற்கான விலையினைச் செலுத்தியேயாக வேண்டும் என பலஸ்தீன தகவல் மத்திய நியைத்தின் செய்தி இணையத்தளத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் ஹனியாஹ் தெரிவித்தார்.
அல்-பத்ஷ் படுகொலையின் பின்னணியில் டெல் அவிவ் அரசாங்கமும் இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொஸாட்டும் இருப்பதாகவும் இந்த நேர்காணலின்போது இஸ்மாயில் ஹனியாஹ் குற்றம் சாட்டினார்.
அல்-பத்ஷ், பலஸ்தீனர்களிடையே சிறந்த பிரதிநிதியாக இருந்தார். அவரது அறிவு, பணி, தொழில்பாங்கு, ஆக்கத்திறன் மற்றும் கண்டுபிடிப்புக்கள் நன்றிக்குரியன. அவர் பலஸ்தீனர்கள், மலேசியர்கள் மற்றும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் பெறுமதிமிக்க சேவையினை வழங்கியிருந்தார் எனவும் ஹமாஸ் தலைவர் சுட்டிக்காட்டினார்.
35 வயதான பாதி மொஹமட் அல்-பத்ஷ் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இடாமன் புட்டேரியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் வைத்து சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கிதாரிகளால் கடந்த சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக மலேசியப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் 10 துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துள்ளனர். அவற்றுள் நான்கு விரிவுரையாளரின் தலை மற்றும் உடலில் தாக்கியிருந்தன. அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார் என கோலாலம்பூர் தலைமை பொலிஸ் அதிகாரி மஸ்லான் லாஸிமை மேற்கோள்காட்டி உத்தியோகபூர்வ பேர்னமா ஊடக முகவரகம் தெரிவித்தது.
பலஸ்தீன விரிவுரையாளரின் வருகைக்காக இருவர் சுமார் 20 நிமிடங்கள் சம்பவ இடத்தில் காத்திருப்பது அவ்விடத்திலிருந்த சிசிரிவி கருவியில் பதிவாகியுள்ளது.
'குறித்த விரிவுரையாளரே அவர்களின் இலக்காக இருந்துள்ளது. ஏனெனில் அதற்கு முன்னதாக அவ்வழியால் சென்ற இருவருக்கு எவ்வித பாதிப்பும் அவர்களால் ஏற்படுத்தப்படவில்லை' என அவர் மேலும் தொவித்தார்.
அல் பத்ஷ் மலேசியாவில் 10 வருடங்களாக வசித்து வருகின்றார். அதிகாலைத் தொழுகையான சுபஹ் தொழுகையினை நிறைவேற்றுவதற்கு செல்லும்போதே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அல் பத்ஷ் தனியார் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராகக் கடமையாற்றி வந்தார்.
இதனிடையே இக் கொலைக்கு வெளிநாட்டு முகவரமைப்புக்களின் தொடர்பு இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக மலேசியா தெரிவத்துள்ளது.
அல்-பத்ஷ், பலஸ்தீன விவகாரம் தொடர்பில் சமூக வலைத்தளத்தில் வெளிப்படையாகக் குரல் கொடுத்து வந்தவர். பலஸ்தீனர்கள் மீளத் தமது வாழிடங்களுக்குச் செல்வதற்கான நில தினப் போராட்டம் சார்பான பல டுவிட்டர் பதிவுகளை அவர் பகிர்வு செய்திருந்ததோடு, இதன்போது உயிரிழந்த பலஸ்தீன ஊடகவியலாளர் யாஸீர் முர்தஜாவுக்கும் தனது அனுதாபத்தைத் தெரிவித்திருந்தார்.
கடந்த காலங்களில் வெளிநாடுகளிலுள்ள பல பலஸ்தீன செயற்பாட்டாளர்களின் படுகொலைகளுடன் இஸ்ரேலிய முகவர்கள் தொடர்புபட்டிருந்ததாக நம்பப்படுகின்றது.
பலஸ்தீன ஆளில்லா விமான நிபுணரான மொஹமட் அல் ஸவாரி கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி துனிசியாவில் ஸ்பக்ஸிற்கு வடக்கே ஏழு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள எல் எயின் நகரிலுள்ள தனது வீட்டிற்கு முன்னால் அவரது காரினுள் இருந்த நிலையில் துப்பாக்கியால் பல முறை சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
ஸவாரி தமது அமைப்பில் 10 ஆண்டுகளே அங்கத்தவராக இருந்ததாகவும், தமது அமைப்பின் ஆளில்லா விமான நிகழ்ச்சித்திட்ட கண்காணிப்பாளராக மாத்திரமே பணியாற்றியதாகவும் குறிப்பிட்டிருந்த பலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவான இஸ்ஸதீன் கஸ்ஸாம் படைப்பிரிவு இக் கொலைக்கு இஸ்ரேலே காரணம் எனக் குற்றம்சாட்டியது.
கடந்த 2010 ஜனவரி 19 ஆம் திகதி சிரேஷ்ட ஹமாஸ் இராணுவத் தளபதியும் கஸ்ஸாம் படைப்பிரிவின் தாபக உறுப்பினர்களுள் ஒருவருமான மஹ்மூத் அப்துல் றஊப் அல் மப்ஹெள ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலுள்ள அல் பஸ்தான் ரொட்டானா ஹோட்டலில் வைத்து மொஸாட் முகவர்களினால் கொல்லப்பட்டார்.
-Vidivelli
Post a Comment