பள்ளிவாசல்களும், மாற்று மதத்தினரும்
இலங்கையைப் பொறுத்தவரை ஆயிரக் கணக்கான பள்ளிவாசல்கள் நாடெங்கும் நிறைந்துள்ள போதிலும் அவை மாற்று மத சகோதரர்களுக்காக திறக்கப்படுவதில்லை. அதனால்தான் அவர்கள் இன்று வரை பள்ளிவாசல்களை சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை நீடிக்கின்றது. இதனை மாற்று மத தலைவர்களே அடிக்கடி வலியுறுத்துவதை அவதானிக்க முடிகிறது.
கடந்த காலங்களில் பள்ளிவாசல்கள் ஆயுதப் பயிற்சி அளிக்கப்படும் இடங்களாகவும் முஸ்லிம்களை வன்முறையின் பால் தூண்டுகின்ற இடமாகவுமே இனவாதிகளால் சித்தரிக்கப்பட்டன. இன்றும் இவ்வாறுதான் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். அண்மைய கண்டி வன்முறைகளின் பின்னரும் இந்தக் கருத்துக்கள் அதிகம் மேலெழுந்தன.
மேற்கு நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பள்ளிவாசல்கள் கதவுகள் எந்நேரமும் திறந்தே வைக்கப்படுகின்றன. இஸ்லாம் தொடர்பான சந்தேகங்கள் அங்கு நிவர்த்திக்கப்படுகின்றன. இதன் மூலம் முஸ்லிம்கள் தொடர்பாகவும் இஸ்லாம் தொடர்பாகவும் நிலவும் சந்தேகங்கள் களையப்படுகின்றன. அதனால்தான் அங்கு சாரிசாரியாக இஸ்லாத்தை நோக்கி மக்கள் வந்தவண்ணமிருக்கிறார்கள்.
துரதிஷ்டவசமாக நமது நாட்டில் பள்ளிவாசல்களை மாற்று மதத்தினருக்காக திறந்து கொடுக்கவும் அவர்களை உள்ளே அழைத்து உபசரிக்கவும் தயங்குகிறோம். ஏன் முஸ்லிம் பெண்களைக் கூட ரமழான் தவிர்ந்த நாட்களில் பள்ளிவாசல்களில் அனுமதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத மனோ நிலைதான் இன்று நமது சமூகத்தில் நீடிக்கிறது.
இவ்வாறான பிற்போக்குத்தனமான சிந்தனைகள் கைவிடப்பட வேண்டும். பள்ளிவாசல்கள் நமது பெண்களுக்காக மாத்திரமன்றி மாற்று மத ஆண்கள் பெண்களுக்காகவும் திறக்கப்பட்டு, அவர்களது உள்ளங்களில் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் நல்லெண்ணம் வளர இடமளிக்கப்பட வேண்டும்.
இதுவிடயத்தில் இஸ்லாம் வலியுறுத்துகின்ற வரையறைகளைப் பேண வேண்டியதும் அவசியமாகும். அந்த வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இது தொடர்பில் பத்வா ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் மஸ்ஜித் வளாகத்தில் இதற்கென்று பிரத்தியேக இடமொன்றை ஒழுங்கு செய்து கொள்தல், இணைவைத்தலுடன் சம்பந்தமான எந்தக் காரியமும் நிகழா வண்ணம் ஏலவே உத்தரவாதப்படுத்திக்கொள்ளல், மஸ்ஜிதைத் தரிசிக்க வருவோருக்கு மஸ்ஜிதின் மகத்துவம் மற்றும் ஒழுங்கு முறைகள் பற்றிய தெளிவொன்றை ஆரம்பத்திலேயே வழங்குதல், ஆண், பெண் இருபாலாரினதும் ஆடைகள் ஒழுக்கமான முறையில் இருத்தல், மஸ்ஜிதில் நுழைய விரும்பும் பெண்களுக்கு பிரத்தியேக ஆடையொன்றை ஏற்பாடு செய்தல், பாதணிகளுடன் மஸ்ஜிதிற்குள் நுழைவதை அனுமதிக்காதிருத்தல், எவரும் போதையுடன் இல்லாதிருத்தல், எக்காரணம் கொண்டும் தொழுகை மற்றும் ஜுமுஆ போன்ற வழிபாடுகளுக்கு இடையூறு இல்லாததாக இருத்தல், றமழானுடைய மாதத்தில் இப்தாருடைய நேரத்தில் அவர்களை அழைக்கும் பொழுது இப்தாருடன் சம்பந்தப்பட்ட வணக்கங்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், அந்நேரங்களில் அவர்களை அழைப்பதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளல் ஆகிய ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவற்றைத் தழுவியதாக பள்ளிவாசல்களில் மாற்று மதத்தவர்களை அனுமதிக்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவது சிறந்தது என வலியுறுத்த விரும்புகிறோம்.
(விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)
அரபு நாடுகளில் கண்ட கண்ட மாதிரியல்லாம் பள்ளிகள் திறந்து வைக்கப்படவில்லை.மாற்று மத சகோதரர்களுக்கு அனுமதிக்க வேண்டும் ஆனால் அத்து மீறும் வகையில் அனுமதிக்க முடியாது.
ReplyDeleteMasjid only for praying Allah unbeleavers forbiden who's heart filled with shirk even little it's forbiden to entering inside masjid it's rabbulaalemeens strong order.
ReplyDelete