மகிந்த புடம்போட்டப்பட்ட அரசியல்வாதி, தம்மிடம் வருபவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதை அவர் அறிவார் - மரிக்கார்
சந்தர்ப்பவாத அமைச்சர்கள் சிறப்புரிமைகளை பெற்று தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகித்து கொண்டு, தற்போது மகிந்தவிடம் நெருங்க முயற்சிப்பதாகவும் அவர்களை மகிந்த தங்கள் பக்கம் இணைத்துக்கொள்வாரா என்பது தெரியவில்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -09- நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக அனுமதியளிப்பார்கள் என நாங்கள் நினைக்கின்றோம்.
அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்து விட்டு அவர்களால் எப்படியும் அமைச்சு பதவிகளை பெற முடியாது. இவர்கள் அனைவருக்கும் மகிந்த ராஜபக்சவிடம் செல்ல வேண்டியே தேவை ஏற்பட்டுள்ளது.
அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின் தற்போதே மகிந்த ராஜபக்சவிடம் செல்ல வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி நிரலில் இருந்தே அவர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், இவர்கள் அனைவரும் புத்தாண்டு முன்னர் அங்கு சென்று ஒட்டிக்கொள்வார்கள்.
மகிந்த அவர்களை இணைத்து கொள்வாரா என்ற சந்தேகம் எனக்குள்ளது. காரணம் மகிந்த நன்றாக புடம்போட்டப்பட்ட அரசியல்வாதி. இதனால், தம்மிடம் வருபவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதை அவர் அறிவார்.
மூன்று ஆண்டுகள் அமைச்சு பதவிகளின் சிறப்புரிமைகளை அனுபவித்து விட்டு, தன்மீதுள்ள அன்பால், அவர்கள் வரவில்லை. தேர்தலில் வெற்றி பெறவே வருகிறார்கள் என்பதை மகிந்த அறிவார் எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment