Header Ads



8 வயது முஸ்லிம் சிறுமி கோயிலில் கற்பழிக்கப்பட்டு செய்து கொலை செய்யப்பட்டதைவிட, இந்தியாவிற்கு வெட்க கேடான செயல் வேறு இருக்குமா..?

காஷ்மீரில் கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் உன்னோவில் சிறுமி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.வால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீண்ட நாட்கள் மௌனம் காத்த பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இச்சம்பவங்கள் தொடர்பில் “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” பத்திரிக்கைக்கு பேட்டியளித்த மன்மோகன் சிங் பேசுகையில்; “சந்தேகமே வேண்டாம் மோடி அரசு தோற்று விட்டது. பெண்கள் பாதுகாப்பில் மோடி அரசு பகிரங்கமாக தோற்று விட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் பிரதமர் மோடி மௌனம் காப்பது தொடர்பில் முன்னாள் பிரதமர் மண் மோகன் சிங் கருத்து வெளியிட்டுள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் 2012 சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது மோடி பேசுகையில், “மக்கள் பிரச்னைகளை பற்றி பேசாத அவர் மன்மோகன் சிங் அல்ல, மவுன மோகன் சிங்” என்று அப்பொழுது பிரதமரை விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், “எனக்கு அன்று கூறிய அட்வைஸை பின்பற்றுங்களேன், அடிக்கடி பேசுங்கள்,” என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

“2012 ஆம் ஆண்டும் டெல்லியில் இளம்பெண் ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமையின் போது காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது. அடுத்த கணமே குற்றவாளிகள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஆனால், கத்துவா மற்றும் உன்னாவ் விவகாரத்தில் மோடி அரசு இதுப்போன்று ஒரு துரித நடவடிக்கை எடுக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

காஷ்மீர் முதலமைச்சர் மெகபூவா முஃப்தி, கூறியது போல் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உடனடியாக நிறைவேற்ற சட்டம் கொண்டு வர வேண்டும். கத்துவா சிறுமி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, 2 பிஜேபி அமைச்சர்கள் பேரணியில் கலந்துக் கொண்டது மன்னிக்க முடியாத செயல். இந்த விவகாரத்தில் மெகபூவா உடனடியான நடவடிக்கையை எடுக்க அவரின், கூட்டணி மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள பிஜேபி அமைச்சர்கள் தடையாக நிக்கலாம் யாருக்கு தெரியும்.

8 வயது சிறுமி கோயில் கருவறையில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை விட, இந்தியாவிற்கு வெட்க கேடான செயல் வேறு இருக்குமா? இந்தியாவில், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் அட்டூழியங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இவை தடுக்கப்படாமல் இருந்தால் ஒரு நாள் ஜனநாயகமே அழிந்து விடும்.

கத்துவா மற்றும் உன்னாவ் விவகாரம் மட்டுமில்லை பாஜகவினர் செய்யும் பல்வேறு அட்டூழியங்களை மோடி கண்டும் காணாமல் தான் இருக்கிறார். மோடி அரசின் ஆட்சிக் காலத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக மாறியுள்ளது. சிறுபான்மையினர், தலித் மக்கள் என்று இவர்கள் பிரித்து வைத்து அரசியல் நடத்துவது எற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

சட்டங்களும் களத்தில் இருக்கும் அரசிற்கு சாதகமாகவே செயல்படுகிறது.” என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.