கள்ளத்தனமாக காணி உறுதிகளை எழுதும் 6 பேர் கம்பஹாவில் கைது
கம்பஹா மாவட்டத்தில் கைவிடப்பட்டுள்ள நிலையிலுள்ள பிறரின் காணிகளுக்கு கள்ளத்தனமாக காணி உரிமைகளை எழுதிக்கொடுக்கும் ஆறு பேர் கொண்ட குழு ஒன்றை, பேலியகொடை விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட பல தேசிய அடையாள அட்டைகள், 28 கைத்தொலைபேசிகள், காசோலைகள், வங்கிப்புத்தகங்கள், போலி உரிமையாளர்களின் படங்கள், நொத்தாரிசு (சீல்) முத்திரைகள், போலிக் காணி உறுதிகள், ஒரு லெப்டொப் உள்ளிட்ட பெருந்தொகையான போலி ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ராகம (பிரதான சந்தேக நபர்), வெயாங்கொடை, ஹோகந்தர, கம்பளை ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களான 45 - 60 வயதுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் இதுவரை நான்கு கோடி ரூபா வரையிலான பண மோசடி செய்துள்ளதாகவும், இந்தக் காணி மோசடி தொடர்பில் இதுவரை 11 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாகவும், பேலியகொடை விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில், மேல் மாகாண வடக்கு வலயத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, களனி பொலிஸ் அதிகாரி யூ. ஜயசிங்க ஆகியோரின் உடனடி பணிப்புரையின் கீழ், விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி சமிந்த ஹெட்டி ஆரச்சி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment