முஸ்லிம்களுடைய இழப்பை, அரசு குறைத்து மதிப்பிடக்கூடாது - FMM
அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் இடம்பெற்ற இன ரீதியிலான வன்முறை சம்பவங்கள் தற்போது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று அறிகிறோம்.
எனினும் அதனை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முடியாத தனது இயலாமையை மறைப்பதற்காக அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையிட்டு சுதந்திர ஊடக இயக்கமும் ஜனநாயகத்தை விரும்பும் ஏனைய அமைப்புகளும் அதிர்ச்சியடைந்துள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளினால் ஏற்பட்ட இழப்பை வெறும் பொருளாதார இழப்பாகவும் நட்டஈடு கொடுத்தால் சரியாகிவிடும் என்றும் அரசு குறைத்து மதிப்பிடக்கூடாது. அடிக்கடி நிகழும் இது போன்ற சம்பவங்களின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார காரணங்களை கண்டறிந்து அதற்கான நீண்டகால தீர்வுகளை எட்ட வேண்டியது ஒரு அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும்.
இக்காரணங்களைக் கண்டறியாது அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளில் பல ஜனநாயகத்துக்கு தீங்குவிளைவிப்பதாக அமைந்துள்ளது. இது மற்றுமொரு பெரிய பிரச்சினையாகும். அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தியதும், சமூகவலைத்தளங்களை முடக்கியதும் பிரச்சினையை மேலும் தீவிரமடையச் செய்துள்ளது.
சாதாரண சட்டத்தின் ஊடாகவும், இன பாகுபாடுகளை அகற்றும் நோக்கில் மக்களை அறிவுறுத்துவதற்காக இதுவரை எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை துரிதப்படுத்துவதன் மூலமாகவும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நாம் ஆரம்பத்திலேயே கூறினோம். ஜனநாயகத்தை பாதிக்கும் செயல்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Post a Comment