Header Ads



ரணில் தப்பிப்பார், விரைவில் பெரிய மாற்றம் ஏற்படும் - ஹரின்


ஐக்கிய தேசியக்கட்சியில் விரைவில் பெரிய மாற்றம் ஏற்படும் என நம்புவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

காலி வந்துரம்ப பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நிலவும் நிலைமை புரிந்துக்கொண்டு புதிய முறையையும், புதிய பொறுப்பையும் பிரதமர் கட்சிக்கு வழங்குவார். இதற்கு அமைய உரிய நேரத்தில் பொறுப்பை பிரதமர் கைமாற்ற நடவடிக்கை எடுப்பார் என நாங்கள் நம்புகிறோம்.

கட்சியில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து கடந்த நாட்களில் நாங்கள் விரிவாக கலந்துரையாடினோம். கட்சியின் தலைமை காணப்படும் நிலைமையை புரிந்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்தும் இதனை செய்ய முடியாது. ரணில் விக்ரமசிங்க முதலில் பிரதமராக தெரிவாகும் போது நாங்கள் சாதாரண தரப் பரீட்சையை கூட எழுதியிருக்கவில்லை.

பிரதமர் எந்த குழப்பமும் இல்லாமல் உரிய நேரத்தில் பொறுப்பை கைமாற்ற நடவடிக்கை எடுப்பார் என நாங்கள் நம்புகிறோம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கையில் உள்ள சிரேஷ்ட அரசியல்வாதி. மூன்று முறை பிரதமராக பதவி வகித்துள்ளார்.

இம்முறையும் அவர் தனது திறமையை பயன்படுத்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையில், தப்பிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.

அரசாங்கம் எப்படி செல்ல வேண்டும் என்பதை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீண்டும் தீர்மானிக்கும் என எண்ணுகிறேன் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.