லசந்த கொலையுடன், பொன்சேகாவிற்கு தொடர்புண்டா..?
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலையுடன், அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிற்கு தொடர்பு கிடையாது என சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சரத் பொன்சேகாவிற்கும் லசந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து இவ்வாறு போலிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
சரத் பொன்சேகாவிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்படக்கூடாது என்ற நோக்கில் இவ்வாறு திட்டமிட்ட அடிப்படையில் போலிப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லசந்த கொலை தொடர்பில் இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்தக் கொலையானது மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகரவின் தலைமையில் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.
லசந்த கொலையுண்ட காலத்தில் மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.
அமால் கருணாசேகரவை பணிப்பாளர் பதவிக்கு சரத் பொன்சேகா நியமித்த போதிலும், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோதபாயவின் கட்டளைகளுக்கு அமையவே அமால் கடமையாற்றியிருந்தார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
லசந்த கொலையுடன் சரத் பொன்சேகாவிற்கு தொடர்பு உண்டு என குற்றப் புலனாய்வுப் பிரிவு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment