Header Ads



நமது உதவிகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்ப்பது, வீண் பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும்

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளின் தாக்குதல்களால் பள்ளிவாயல்கள், வியாபாரஸ்தலங்கள், வீடுகள், ஏனைய சொத்துக்கள் என பல  சேதங்கள் ஏற்பட்டு அப்பகுதி வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அப்பகுதிகளில் நிவாரண, புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், செயலாளர் உட்பட நிறைவேற்றகுக் குழு உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழுவொன்று 2018.03.11 அன்று பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்து தேவையான நிவாரண உதவிகளை முன்னெடுக்க  கண்டி பிரதேசத்திலுள்ள பல நிறுவனங்களை உள்ளடக்கிய குழுவொன்றை அமைத்து அங்குரார்பனம் செய்து வைத்தனர். 

அக்குழுவினூடாக ஆவணப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு இத்தருணத்தில் சில விடயங்களை மிகவும் அவதானத்துடன் நாட்டு முஸ்லிம்கள் கையாள வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அவர்களது உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டிருப்பதனால் அங்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈட்டை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நிலையில் இதுவரை பொலிஸ் நிலையங்களில் தமது சேதங்களுக்கான முறையீடுகளை பதிவு செய்யாதவர்கள் அவசரமாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

இப்படியான தருணங்களில் இழப்புக்கள் ஏற்பட்டவர்களுக்கு உதவுவது முஸ்லிம்களாகிய எமது கடமை என்ற வகையில் இவர்களுக்கு உதவ மக்கள் முன்வந்திருப்பது பராட்டுக்குறிய விடயமாகும். எனினும் நமது உதவி விபரங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதை முற்றாக தவிர்ந்து கொள்வது வீண் பிரச்சினைகளில் இருந்து எம்மை பாதுகாக்கும் என்பதால் அது விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறு வேண்டப்படுகின்றனர்.


அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்

செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.