Header Ads



"எவர் எதைச் சொன்னாலும் நாங்கள், நேர்மையாக பயணிக்கிறோம்" - ரிஷாட்


அரசாங்கம் இன்று விழுந்துவிடும், நாளை விழுந்துவிடும் என ஊடகங்கள் கட்டியங்களையும், ஊகங்களையும் வெளிப்படுத்தி வரும் நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாட்டின் ஸ்திரமான ஆட்சி ஒன்றையே வலியுறுத்துவதாக அக்கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இலங்கை கனிய மணல் நிறுவனத்தின் 60 வது வருடப் பூர்த்தியை முன்னிட்டு, நேற்று மாலை (01) புல்மோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

ஆட்சியின் ஸ்திரம் இல்லாத போக்கு நாட்டுக்கோ, மக்களுக்கோ உகந்ததாக அமையாது. இதனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதை அரச தலைமைகள் உணர்ந்து பணியாற்ற வேண்டும். 

இலங்கை கனிய மணல் நிறுவனத்தின் அரச வளங்களை, தமது சொந்த வளங்கள் போல கருதி அதனை சீரழிப்பதற்கு சிலர் முயற்சி எடுத்த போதும், நாம் அதற்கு இடமளிக்காததால், இங்கிருக்கும் சில ஊழியர்களின் துணையுடன் எமக்கெதிராக  அபாண்டங்களையும், பழிகளையும் பரப்பினர். ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து, நிறுவனத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்யும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டனர். 

இந்தப் பிரதேசத்தில் உள்ள சுமார் 150 பேருக்கு நாம் தொழில் வாய்ப்புக்களை வழங்கிய போதும், எமக்கெதிராக அவர்கள் போராட்டத்தை நடத்தினர். எனினும், இங்கு தொழில் புரியும் பெரும்பாலான ஊழியர்கள் உண்மையை அறிந்து, எமது நேர்மையான பணிகளுக்கு பக்கபலமாக இருந்தனர். அவர்களை நாம் கௌரவத்தோடு இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூர விரும்புகின்றேன்.

கடந்த காலங்களில் இந்த நிறுவனத்தைப் பொறுப்பெடுத்தவர்களும், நிருவகித்தவர்களும், தாங்கள் இந்த நிறுவனத்திலிருந்து எதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றே சிந்தித்தனர். ஆனால், நாம் பொறுப்பேற்று இரண்டு வருட காலங்களில் எவ்வாறு நிறுவனத்தின் வருமானத்தைப் பெருக்குவது? இங்கு பணியாற்றுபவர்களின் ஊதியத்தை எவ்வாறு அதிகரிப்பது? என்று சிந்தித்து அதற்கான திட்டங்களை மேற்கொண்டோம். இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி, முதலீட்டாளர்களை வரவழைத்து, உற்பத்தித் திறனை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம். இது தொடர்பில், ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் பலதடவை பேசியிருக்கின்றோம். அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பித்து, திட்டங்களை வகுத்து வருகின்றோம். திருகோணமலை மாவட்டத்திலும், இந்தப் பிரதேசத்திலும் வாழ்பவர்களுக்கு தொழில் வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது பற்றி சிந்திக்கின்றோம். 

எனது தொகுதியான வன்னி மாவட்டத்திலோ அல்லது புத்தளம் மாவட்டத்திலோ வாழ்பவர்களுக்கு இந்த நிறுவனத்தில் நாம் நியமனங்கள் வழங்கவில்லை. இந்தப் பிரதேசத்தில் உள்ளவர்களுக்கே தொழில்களை வழங்கினோம். எனினும், இந்தப் பிரதேசத்தில் உள்ள ஒருசிலரும், இன்னும் சில அமைப்புக்களும் எனக்கு இந்த நிறுவனத்தை வழங்க வேண்டாமென உயர்மட்டத்துக்கு கடிதம் எழுதியதை நாம் அறிவோம். 

இந்த நிறுவனம் எனது அமைச்சின் கீழ் இருந்த காலப்பகுதிதான் “பொற்காலம்” என வரலாறு சொல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நாங்கள் செய்துவரும் மற்றும் செய்யப் போகும் விடயங்கள் வரலாற்றில் எழுதப்படும்.

எவர் எதைச் சொன்னாலும் நாங்கள் இறையச்சத்துடன் நேர்மையாக பயணித்து வருகின்றோம். அமைச்சுப் பதவியை பறிக்குமாறு ஆர்ப்பாட்டம் செய்து, ஊடகங்களை வரவழைத்து எமக்கெதிராக எத்தனையோ சதிகள் இடம்பெற்ற போதும், நாம் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை. “எது நடந்தாலும் எடுத்த முடிவை மாற்ற மாட்டோம்” என்பதில் உறுதியாக இருந்ததினாலேயே எமக்கு வெற்றி கிடைத்தது என்று அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்வில் கைத்தொழில், வர்த்தக இராஜாங்க அமைச்சர் சம்பிக பிரேமதாச, அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி, நிறுவனத்தின் தலைவர் திருமதி. இந்திகா, முகாமைத்துவப் பணிப்பாளர் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், பணிப்பாளர் சபை உறுப்பினர் அப்துல் ரசாக், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான தௌபீக், சல்மான் பாரிஸ், பதுருதீன், நியாஸ் மற்றும் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.                

No comments

Powered by Blogger.