உங்களுக்காகத் தான் காத்திருந்தேன் - உருகிய சிரிய சிறுமி
சிரியாவில் போரினால் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுமி ஒருவர், தன்னை மீட்க வந்த நபரிடம் உங்களுக்காக தான் காத்திருக்கிறேன் என உருக்கமாக கூறினாராம்.
சிரியாவில், வான்வழித் தாக்குதலினால் தரைமட்டமான கட்டிடத்தில் சிக்கிய மக்களை, ‘The White Helmets’ என்ற தன்னார்வ அமைப்பினர், கடந்த ஐந்து ஆண்டுகளாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜேம்ஸ் லி மெசுரியர் என்பவர் நிறுவிய இந்த தன்னார்வ அமைப்பில், சுமார் 3000 பேர் உள்ளனர். இவர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்க்கும் பணியை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், போர்க்களத்தில் தாங்கள் சந்திக்கும் உணர்வுப்பூர்வமான தருணங்களை, தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த அமைப்பினர் பதிவிட்டு வருகின்றனர்.
அதில், மக்மூத் ஆதாம் எனும் தன்னார்வலர் தனது பதிவில் கூறுகையில்,
‘சிரியாவின் கவுட்டா நகரில், வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் தரைமட்டமான கட்டிடத்தின் இடிபாடுகளில் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்.
அப்போது, என் கைக்கு சிறுமி ஒருவர் தென்பட்டார். அவரைச் சுற்றியிருந்த கற்களையும் அகற்றி, அவளை தூக்கும்போது நான் உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன் என்று அந்த சிறுமி கூறினாள்’ என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், White Helmets அமைப்பைச் சேர்ந்த மக்மூத் அல்கிலானி, கவுட்டா நகரில் மீட்புப் பணிகளின் போது பலியாகியுள்ளார். அவருக்கு இந்த அமைப்பினர் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment