காத்தான்குடியில் கண்டன பேரணி
சிரியா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்தும் அதற்கு எதிராக ஐ.நா வை நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று (02.03.2018) வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் கண்டனப் பேரணி நடைபெற்றது.
தேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் மற்றும் காத்த நகர் அரசியல் களத்தின் ஏற்பாட்டில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் முன்றலிலிருந்து ஆரம்பமான இந்த கண்டன பேரணி காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்றது.
இக் கண்டன பேரணியில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் (பா.உ) அவர்கள்இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி திருமதி.நினா பிராண்ட்ஸ்ட்ராபுக்கு அனுப்பி வைப்பதற்கான மஹஜரொன்றையும் காத்தான்குடி பிரதேச செயலாளர் திரு.யூ.உதயஸ்ரீதரிடம் கையளித்தார்.
சிரியா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை நிறுத்த ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும், முஸ்லிம் நாடுகள் அனைத்தும் சிரியா யுத்தத்தை நிறுத்த ஐ.நாவுடன் இணைந்து செயற்படல் வேண்டும் என்ற கோரிக்கைகள் அந்த மஹஜரில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த கண்டன பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் ஐ.நா சபையே தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடு, மனித உயிர்களுக்கு மதிப்பளி, சிரியா அரசே குழந்தைகளை கொல்லாதே, சிரியா அரசே நிறுத்து நிறுத்து மனித படுகொலைகளை உடன் நிறுத்து, ஐ.நா வே அப்பாவி சிரியா குழந்தைகளை பாதுகாரு, அழிகிறது மனிதம் ஐ.நா வே கண்ணை திற என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை பேரணியில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.
(ஹம்ஸா கலீல்)
Post a Comment