"முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் பிக்குகளும், சிங்கவர்களும் செய்த உதவிகளை மறக்கமுடியாது"
முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகள் தாக்குதல்களை முன்னெடுத்த சமயங்களில் பௌத்த பிக்குகளும் பெரும்பான்மையின சகோதரர்கள் சிலரும் பள்ளிவாசல்களையும் முஸ்லிம்களின் உடைமைகளையும் முன்னின்று பாதுகாத்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்கமைய அவர்கள் பள்ளிவாசல்களிலும் முஸ்லிம்களின் வீடுகளிலும் இரவிரவாக தங்கியிருந்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கண்டி திகனயில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைத் தாக்குதல்களைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் குறிப்பாக கண்டி, ஹாரிஸ்பத்துவ, குண்டசாலை, பாத்ததும்பரை முதலான பகுதிகளில் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கெதிராக இனவாதிகளால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இத்தாக்குதல்களின் தொடர்ச்சியால், கண்டி மாவட்ட முஸ்லிம்கள் அச்சத்தில் உறைந்திருந்த சந்தர்ப்பத்தில் மாவட்டத்தில் முஸ்லிம் பகுதிகளில் பௌத்த பிக்குமார்கள், பெரும்பான்மையின அரசியல்வாதிகள், பெரும்பான்மையின சகோதரர்கள் முன்வந்து முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை பற்றிய பல தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
கடந்த செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு கண்டி மாவட்டத்தில் தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் அதேதினம் முற்பகல் 11 மணிக்கு அமுல்படுத்தப்படட போது மக்கள் மத்தியில் அச்சம், பீதி உட்பட பதற்றமும் அதிகரித்திருந்தன.
இச்சந்தர்ப்பத்தில் கெலிஓயா பகுதியில் பெரும்பான்மையின சகோதரர்கள் ஒலிபெருக்கியில் கெலிஓயா பகுதியில் சிங்கள மொழியில் அறிவிப்பு செய்தனர். இதில் இப்பிரதேச அரசியல் பிரமுகர்களும் பங்குபற்றினர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பிரதேச இன அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் பிரதேசத்தின் அமைதிக்கும் முஸ்லிம்கள் மத்தியில் நிலவிய அச்சம் , பீதி மற்றும் பதற்றத்தைக் குறைப்பதிலும் பெரும் பங்கு வகித்ததுடன் பாராட்டும்படியாக அமைந்திருந்தது.
கண்டி மாவட்டத்தில் கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பகுதிகள் மிகவும் அமைதியாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். முஸ்லிம்களுக்கெதிரான சம்பவங்கள் ஏனைய பகுதிகளுக்கும் பரவுவதாக தகவல் கிடைத்தவுடன் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே உடனடியாக தனது நாவலப்பிட்டி பகுதியிலுள்ள முஸ்லிம் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். இப்பகுதி முஸ்லிம்களை பள்ளிவாசல்களில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி அச்சத்தை போக்குவதில் மும்முரமாக ஈடுபட்டதாக முஸ்லிம்கள் தெரிவித்தனர்.
மேலும், யடிநுவர தொகுதியில் அமைந்துள்ள தந்துர கிராமத்தில் நூற்றுக்கும் குறைவான முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அமைதியற்ற நிலையால் இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சம் குடிகொண்டிருந்தது. இதனையறிந்து தந்துதுரை முன்வதுகொடை பகுதி பௌத்த விகாரைகளை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் தந்துரை பள்ளிவாசலுக்கு வருகை தந்தும் மற்றுமொரு பௌத்த பிக்கு முஸ்லிம்களை விகாரைக்கு அழைத்தும் முஸ்லிம்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நாம் உங்களுடன் இருப்போம் என்று ஆறுதல்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேபோல் முறுத்தலாவ பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் முறுத்தலாவ நகரில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் உடைமைகளுக்கு சேதம் இடம்பெறக் கூடாது என்பதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டுள்ளதாக அப்பகுதி முஸ்லிம்கள் தெரிவித்தனர். இவர், முறுத்தலாவ நகரில் இரவு வேளையில் கண்விழித்து பள்ளிவாசலில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கண்டி அலதெனிய பகுதியில் தக்கியா ஒன்றை வெளிப்பிரதேசத்தில் இருந்து வந்த கும்பலொன்று தாக்க முற்பட்ட போது அங்கு குழுமிய பெரும்பான்மை மக்கள் தாக்குதல்தாரர்களை விரட்டியடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கம்பளை பகுதியில் அச்ச நிலை தலைதூக்குவதைத் தடுக்கும் பொருட்டு கம்பளை உடபலாத்த பிரதேச செயலகத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள், பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதியமைச்சர் அநுராதா ஜயரட்ண மற்றும் கம்பளை நகர சபையின் முன்னாள் உப தலைவர் சமந்த அருணகுமார ஆகியோர் பங்குபற்றினர். இவர்கள் கம்பளையில் முஸ்லிம் பகுதிகளுக்கு சென்று முஸ்லிம்களின் பாதுகாப்பில் அக்கறை காட்டியதாகவும் முஸ்லிம்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவங்கள் இடம்பெற்ற தினங்களில் பெருமளவிலான பெரும்பான்மையின சகோதரர்கள் முஸ்லிம்களை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தும் தமது வீடுகளில் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
-விடிவெள்ளி-
Thanks a million to thos who helped Muslim at the time of dangerous situations created by some individuals.
ReplyDeleteIs any UNP members done like this. If have please publish it.
ReplyDelete