குருணாகல் மத்ரஸா மீது கல்வீச்சு தாக்குதல்
குருணாகல் மாவட்டம், கொக்கரல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெல்சிறிபுர பகுதியில் அமைந்துள்ள அரபுக் கல்லூரி (மத்ரஸா) ஒன்றின் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் நேற்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மெல்சிரிபுர, மாயிவல பகுதியில் மெல்சிரிபுர - தித்தெனிய வீதியை அண்மித்து அமைந்துள்ள மத்ரஸா மீதே இந்த கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் காரணமாக மத்ரஸாவின் கணினி அறைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த அறையின் கண்ணாடிகள் உள்ளிட்டவை நொருங்கியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் வட மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிரி குணவர்தனவின் உத்தரவுக்கு அமைய குருணாகல் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தனவின் மேற்பார்வையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமன் பீ ரத்நாயக்கவின் ஆலோசனைக்கு அமைய கொகரல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதலை நடத்தியோர் வந்தததாக கூறப்படும் மோட்டார் சைக்கிளை மையப்படுத்தி தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை விரைவில் கைது செய்ய ,முடியும் என நம்புவதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Post a Comment