கிணற்றில் விழுந்து 2 சிறுவர்கள் வபாத்
மன்னார் காக்கையன் குளம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு சிறுவர்கள் பாதுகாப்பற்ற தோட்ட கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
முஹமட் சம்ரான் (வயது-5) மற்றும் முஹமட் அஸ்ஹான் (வயது-7) ஆகிய இரு சிறுவர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சகோதரர்கள் இருவரும் நேற்று (15) மாலை காக்கையன் குளம் கிராமத்தில் உள்ள தமது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது தாய் தனது மூன்றாவது பிள்ளையை கவனித்தவாறு வீட்டில் இருந்துள்ளார். வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த குறித்த இரு சிறுவர்களையும், காணாத நிலையில் தாய் தேடியுள்ளார்.
இதன்போது, வீட்டின் பின்புறமுள்ள பாதுகாப்பற்ற தோட்டக்கிணற்றில் குறித்த இரு சிறுவர்களின் சடலங்களும் தென்பட்டுள்ளது.
இதனையடுத்து மடு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், வைத்தியசாலைக்குச் சென்ற மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனையின் பின் சடலங்களை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
Post a Comment