Header Ads



கண்ணாடியை உடைத்தவர் இவர்தான் - பொருத்துவதற்கு 1 இலட்சத்து 40 ஆயிரம் தேவையாம்..!


இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற சுதந்திரக்கிண்ண போட்டியில் ஓய்வறையின் கண்ணாடிக் கதவை உடைத்தவர் பங்களாதேஷ் அணித்தலைவரென செய்திகள் வெளியாகியுள்ளன.

சுதந்திரக்கிண்ண கிரிக்கெட்தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இறுதி லீக் போட்டியில் இறுதி ஓவரின் போது வீசப்பட்ட பந்தால் ஏற்பட்ட நோபால் சர்ச்சையானது பெரிதாகி வீரர்களுக்குள் மோதல் வெடித்தது.

இந்தப் போட்டியின் போது பல சர்ச்சைகள் அரங்கேறின. இந்நிலையில் பங்களாதேஷ் வீரர்கள் இருந்த ஓய்வறையின் கண்ணாடிகள் உடைந்திருந்தன. ஆனால் யார் இதை உடைத்தார்கள் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.

ஆனாலும் இதை உடைத்தது பங்களாதேஷ் வீரர்கள் தான் என்று சந்தேகம் எழுப்பப்பட்டிருந்த நிலையில், ஓய்வறைக் கண்ணாடிகளை உடைத்தது பங்களாதேஷ் அணித் தலைவர் ஷகிப் அல்ஹசன் தான் என தற்போது செய்திகள் கசிந்துள்ளன.

அத்தோடு உடைந்த கண்ணாடிக் கதவுகளை மீளவும் பொருத்துவதற்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் வரை செலவு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தன்று கிரிஸ் பிரோட் கண்காணிப்பு கமெரா பதிவை பார்வையிட்டுள்ளார். அத்தோடு வீரர்களுக்கு சிற்றுண்டி பரிமாறும் பணியாளர் ஒருவர் இதற்கு காரணமான வீரரின் பெயரை கிரிஸ் பிரோட்டிடம் அப்போதே தெரிவித்துள்ளார்.

ஆனாலும் ஷகிப் அல் ஹசன் உள்ளிருந்து திறக்க வேண்டிய கண்ணாடிக் கதவை வேகமாக வெளிப்புறமாக திறந்ததால் குறித்த கண்ணாடிக் கதவு உடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எது எப்படியோ இத் தொடரில் பங்களாதேஷ் அணி வீரர்களின் அருவருப்பான நடவடிக்கைகள் பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளன.

இந்நிலையில் பங்களாதேஷ் வீரர்களின் நடவடிக்கைகள் குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கவலை வெளியிட்டிருந்தது.

இருப்பினும் பங்களாதேஷ் வீரர்களான ஷகிப் அல் ஹசன் மற்றும் நூபல் ஹசனுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை போட்டித் தொகையில் 25 வீத அபராதம் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.