Header Ads



இந்திய வரவுசெலவுத் திட்டத்தில், இலங்கைக்கு நிதி ஒதுக்கீடு

இந்திய வரவுசெலவுத் திட்டத்தில், சிறிலங்கா உள்ளிட்ட அயல்நாடுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சு மேற்கொள்ளும் உதவித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது ஆட்சியில் உள்ள நரேந்திர மோடி அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத் திட்டம் நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் இந்தியாவின் கடல்சார் மூலோபாய இராஜதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அயல்நாடுகளான சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, சிஷெல்ஸ், மொறிசியஸ் போன்ற நாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சீனாவின் தலையீடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகளான சிறிலங்கா, மாலைதீவு, சிஷெல்ஸ், மொறிசியஸ் போன்றவற்றுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறிலங்காவுக்கான நிதி ஒதுக்கீடு, கடந்த ஆண்டு 75 கோடி ரூபாவாக இருந்தது. அது இம்முறை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டு, 150 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா புனரமைக்கவுள்ளது.

அதேவேளை, ஈரானின் சபஹார் துறைமுக அபிவிருத்திக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டது போன்று 150 கோடி ரூபாவை இந்த ஆண்டும் இந்தியா ஒதுக்கீடு செய்கிறது.

மியான்மாரில் திட்டங்களை மேற்கொள்ள 280 கோடி ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், 15,011 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட, 213 கோடி ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.