Header Ads



கிறீஸ் பேயை உருவாக்கி, திருவிளையாடல் காட்டிய கோத்தபாய - தயா கமகே

முஸ்லிம், தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவே கோத்தபாய ராஜபக்ஸ கிறீஸ் பேயை உருவாக்கி திருவிளையாடல் காட்டினார் என சிறு கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று ரமேஸ்புரத்தில் செவ்வாய்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு பேசிய அவர், உங்களது பிரதேசங்களில் பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டாலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்கும் தமிழ் மக்கள் அதிகம் காணப்படுகிறார்கள். 30 ஆண்டுகள் நீங்கள் மிகவும் துயரப்பட்டீர்கள்.

கடந்த கால ஆட்சியாளரான மஹிந்த ராஜபக்ஷ எம்மையும் எமது குழந்தைகளையும் பிறக்கவிருக்கும் குழந்தைகளையும் கடனாளியாக்கிவிட்டு சென்றுள்ளார்.

ஹம்பாந்தோட்டை சூரியவௌ கிரிக்கெட் மைதானம், துறைமுகம், மத்தள விமான நிலையம், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை அனைத்துமே கடனுடன் தான் உள்ளது.

இதிலே அரைவாசியை நாசம் செய்து மிகுதியை கொள்ளையடித்துள்ளார்கள. இவர்கள் கொள்ளையடித்த நிதியை நாங்களும் நீங்களும் இணைந்து வட்டியுடன் கட்ட வேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றபோது துப்பாகியால் சுட்டுக் கொலை செய்தார்கள். குடிநீருக்காக போராடிய மக்களை வெடிவைத்து துரத்துமாறு கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் ரக்பி வீரர் தாஜூடீன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். பிரதீப் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டார்.

செங்கலடி பிரதேசம் கால் நடை வளர்ப்புக்கு உகந்ததாக காணப்படுகிறது. எனது அமைச்சின் ஊடாக செங்கலடியிலுள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு பசு மாடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் சமுதாயம் பசுக்களை பால் பெறுவதற்காகவே வளர்க்கின்றனர். இறைச்சியை சாப்பிடுவதற்கு அல்ல என்பது எமக்கு தெரியும்.

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு தலா ஆறு பசுக்களை வழங்க நினைத்திருக்கின்றோம். இதனுடாக ஐந்து இலட்சத்துக்கு மேல் வருமானம் பெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களுக்கு நல்ல வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் எனப் பலர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இணைந்துகொண்டனர.

No comments

Powered by Blogger.