Header Ads



நான் இனவாதி என சொல்ல இயலாது - மஹிந்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறிய குற்றச்சாட்டுக்கு கூட்டமைப்பு அல்லது அரசாங்கம் ஏன் பதிலளிக்கவில்லை? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில்,

இந்த அரசாங்கம் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் கூட்டாக உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சட்டைபைக்குள் இருக்கின்றார். சம்மந்தன் இங்கே வந்து அதை பெற்று தருவேன். இதை பெற்றுத் தருவேன் என கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்.

நான் ஆட்சியில் இருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடாக கேட்டேன். “அரசியல் தீர்வு குறித்து பேசுவதற்காக வாருங்கள்” என. ஆனால் அவர்கள் அது தொடர்பாக பேசவேயில்லை. ஆனால் இன்று என்ன செய்கிறார்கள்? எங்களிடம் 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளார்கள். இருந்தும் அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறார்கள். இருந்து விட்டு போகட்டும். ஆனால் எதிர்க்கட்சி எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும்.

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய முதலாவது எதிர்க்கட்சி சம்மந்தன் தலைமையிலான எதிர்க்கட்சியாகவே இருக்கும்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஒரு குற்றச்சாட்டை கூறியிருக்கின்றார். அதாவது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாக.

இந்த பாரிய குற்றச்சாட்டு தொடர்பாக மௌனமாக உள்ளார்கள். இதற்கு ஏன் பதிலளிக்கவில்லை? இந்த பணம் மக்களுக்கான பணம். எனவே அது தொடர்பாக மக்கள் கேள்வி கேட்க வேண்டிய ஒரு தருணம் வந்திருக்கின்றது.

நான் கேட்கிறேன் மக்களை ஏமாற்றாதீர்கள். வடகிழக்கு மக்களும், தெற்கு மக்களும் ஒன்றாக இணைந்து வாழவேண்டும். அவர்கள் கௌரவமாக வாழ வேண்டும்.

பொய்களை சொல்லியும், உறுதிமொழிகளை வழங்கியும் மக்களிடம் வாக்குகளை பெறுவதே இவர்களின் வேலை. இவர்களுக்கு மக்கள் வாக்களிக்க கூடாது.

மேலும் நான் இனவாதி அல்ல. நான் இனவாதி என சொல்லவும் இயலாது. காரணம் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் நடேசன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இதேபோல் கூட்டமைப்பு பிரச்சினைகளை தீர்க்காமல் பிரச்சினைகளை வைத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. இதேபோல் இப்போது பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதா?

இந்த அரசாங்கத்தில் மின்சாரம் இல்லை. தண்ணீர் இல்லை. இந்த பிரதேசத்தின் அபிவிருத்தி முடக்கப்பட்டிருந்தது. மக்கள் மத்தியில் விசுவாசமற்ற நிலை காணப்பட்டது.

நாங்கள் தண்ணீரை கொடுத்தோம், மின்சாரத்தை கொடுத்தோம். பாடசாலைகளை கட்டினோம், பிரதேச செயலகங்களை கட்டினோம், பாதைகளை அமைத்தோம், புகைரதவசதி உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை பெற்றுக் கொடுத்தோம்.

பாடசாலை மாணவர்களுக்காக மஹிந்தோதய விஞ்ஞான கூடத்தை அமைத்து கொடுத்தோம். இப்படி பல வேலைத்திட்டங்களை நாங்கள் செய்தோம். இதற்கு காரணம் தெற்கில் உள்ள மக்களுக்கு கிடைக்கும் சகலதும் வடக்கில் உள்ள மக்களுக்கு கிடைக்கவேண்டும் என்பதாலேயே.

முன்னர் ஒரு காலத்தில் உங்கள் பகுதி பிள்ளைகளே கல்வியில் முதல் நிலையை பெற்றார்கள். அதனை பார்க்கும் போது மகிழ்ச்சியடைந்தோம். இந்நிலையில் 2010ம் ஆண்டை விடவும் 2015ம் ஆண்டு எனக்கு மக்கள் அதிகளவில் வாக்குகளை அளித்தார்கள்.

பின்னர் இந்த ஆட்சியில் என்ன அபிவிருத்திகள் நடந்துள்ளது? ஒரு மதகு கூட இவர்களால் அமைக்க இயலவில்லை. நாங்கள் வயல்வெளிகளில் கன்னிவெடிகளை அகற்றி விவசாயம் செய்யவைத்தோம்.

விவசாயத்திற் கான உரம் 350 ரூபாவுக்கு கொடுத்தோம். விவசாயத்திற்கான சகல வசதிகளையும் செய்தோம். ஆனால் இன்று 350 ரூபாவுக்கு உரம் பெற முடியுமா? உரம் பெறுவதற்கு பாகிஸ்தானில் இருந்து கப்பல் வருவதற்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

அரிசிக்கு தாய்லாந்திலிருந்து கப்பல் வருவதற்கு காத்திருக்கவேண்டியுள்ளது. பயறுக்கு இந்தியாவிலிருந்து கப்பல் வருவதற்கு காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் எங்கள் ஆட்சியில் இவை எங்கள் மக்களால் உற்பத்தி செய்யப்பட்டது.

இன்று உற்பத்திக்கு மரியாதை இல்லை. எனவே நாங்கள் இன்று புதிய கட்சி, புதிய கொள்ளை, புதிய குழு ஊடாக வந்திருக்கிறோம். அதனை மக்கள் ஆதரிக்க வேண்டும். வடமாகாண மக்கள் தாமரை மொட்டுக்கு வாக்களிக்கவேண்டும் என மஹிந்த குறிப்பிட்டார்.

1 comment:

  1. நீங்கள் இனவாதி இல்லை என்றால், (சிறுபான்மையினரை கவலைக்கும் அச்சத்துக்கும் மத்தியில் வாழ வைத்த) இன்னல்வாதி என வைத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.