Header Ads



“வாக்குப் பலம்தான் ஒரு சமூகத்தின் மூலநாடி” சரியாகப் பயன்படுத்த ரிஷாட் வேண்டுகோள்


-ஊடகப்பிரிவு-  

முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுடன் கூட்டாகவும், பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலே தனித்துவமாகவும் போட்டியிட்டு, சமூகத்தை மீட்டெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை நகரசபை, கிண்ணியா நககரசபை, கிண்ணியா பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை, சேருவில பிரதேச சபை ஆகியவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று (03) இடம்பெற்ற பல்வேறு கூட்டங்களில் அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வுகளில் உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

நாங்கள் கட்சி அரசியல் நடத்துவது தலைமைத்துவத்தையோ, கதிரைகளையோ பாதுகாக்கும் நோக்கத்தில் அல்ல. முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காகவும், சமூகம் எதிர்கொண்டுள்ள ஆபத்துக்களைத் தடுத்து, நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவுமே நாம் அரசியல் நடத்துகின்றோம். சமூகத்தின் விடிவும், விமோசனமுமே பிரதானமானது. பொதுநலத்தை முன்னிறுத்தி நேர்மையாகவும், நிதானமாகவும் இந்தப் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.
கடந்த காலங்களில் தேசிய கட்சிகளுக்கும், தனித்துவக் கட்சிகளுக்கும் நீங்கள் வாக்களித்து கண்ட பயன்கள் என்னவென்று ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். உங்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக்கு வந்தவர்கள், அமைச்சர்களாகவும், முதலமைச்சர்களாகவும், மாகாண அமைச்சர்களாகவும் பவனி வந்தார்களேயொழிய, உங்களை நாடி வந்து உருப்படியாக ஏதாவது செய்துள்ளார்களா? நீங்கள் பல தசாப்தங்களுக்கு முன்னர் எதிர்நோக்கிய அதே பிரச்சினைகளையே, இன்னும் எதிர்கொள்கின்றீர்கள். இந்த நிலையிலிருந்து உங்களைக் காப்பாற்றும் நோக்கிலும், உங்களுக்கு உதவி செய்யும் நோக்கிலுமே நாம் இங்கு வந்துள்ளோம். உங்கள் வாக்குகளைப் பெற்று அமைச்சராக வேண்டும் என்றோ, அல்லது இருக்கும் அதிகாரத்தை இன்னும் கூட்டிக் கொள்வதற்காகவோ நாம் உங்களை நாடி வரவில்லை.

உள்ளூராட்சித் தேர்தலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வட்டாரத் தேர்தலில், நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்கள். உங்கள் வட்டாரத்தில் உங்களோடு வாழும், இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பொருத்தமானவர்களை நாம் தேர்தலில் இறக்கியுள்ளோம். அவர்களை பிரதிநிதிகளாகத் தெரிவு செய்து, எங்களின் உதவியுடன் நீங்கள் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
கிழக்கு மாகாணத்தில், பொத்துவில் தொடக்கம் புல்மோட்டை வரையிலான சிறுபான்மை மக்கள் வாழும் இடங்களில் கெடுபிடிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 

வயற்காணிகளும், மேய்ச்சல் தரைகளும் “வனவளம்” என்ற பெயரிலும், “வன பரிபாலனம்” என்ற பெயரிலும் அடாத்தாகப் பிடிக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளன. வாழ்வாதாரங்கள் இல்லாததால் மக்கள் வறுமையையும், துன்பத்தையும் அனுபவிக்கின்றனர். இருப்பதற்கு வீடில்லை. போதிய நீர்வாசதி இல்லை. மின்சாரம் இல்லை. அநேகமான கிராமப்புறங்களில் உள்ள பாதைகள் குன்றுங்குழியுமாக, கரடுமுரடாக மண்பாதைகளாகவே காணப்படுகின்றது.

அதிகாரத்தைப் பெற்றவர்கள் இவற்றை கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. “கிழக்கு மாகாண சபையின் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டோம்” என்று தம்பட்டம் அடித்த முஸ்லிம் கட்சி, இற்றைவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 

மாகாணத்தில் முஸ்லிம் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய உச்ச அதிகாரமான முதலமைச்சர் பதவிகளையும், ஏனைய அமைச்சுப் பதவிகளையும் பெற்றவர்கள், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவதற்கான, முறையான திட்டங்கள் எவற்றையுமே வகுக்கவில்லை. 

இவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே, நாம் புதுக்கட்சி அமைத்தோம். “மக்கள் பணியே மகத்தான பணி” எனக்கொண்டு, நாம் அல்லும்பகலும் உழைத்து வருகின்றோம். மக்களின் அடிநாதப் பிரச்சினைகளை இன்னும் நான்கு வருட காலத்துக்குள் திட்டமிட்டு நிறைவேற்றித் தருவோம். அதற்கான அங்கீகாரத்தை உங்களிடம் நாம் வேண்டி நிற்கின்றோம். 

வாக்குப் பலம் தான் ஒரு சமூகத்தின் மூல நாடியாகும். அதனை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். சுமார் 70 வருட காலங்கள் பெருந்தேசியக் கட்சிகளுக்கும், சுமார் 30 வருடகாலங்கள் தனித்துவக் கட்சிகளுக்கும் மாறிமாறி வாக்களித்த நீங்கள், இனிமேலாவது உண்மையை உணர்ந்து, எமக்கு ஒரு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தாருங்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.    

No comments

Powered by Blogger.