Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை, கண்டிக்கிறார் சம்பந்தன்

பிரிவினையையும் ஒற்றுமையின்மையினையும் உருவாக்கும் வகையிலான விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோர், மக்களிடையே இன முறுகலைத் தோற்றுவிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் இருந்து விலகி நிற்க வேண்டும். அந்த வகையில் அம்பாறை பிரதேசத்தில் முஸ்லிம் சகத்தினருக்கெதிராக நடாத்தப்பட்ட தாக்குதல்களை தான் வன்மையாகக் கண்டிப்பதாக எதிர் கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அம்பாறைச் சம்பவத்தின் குற்றவாளிகளுக்கெதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன். இதேவேளை, இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதனை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். 

கடந்த காலத்தில் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றதனையும் அத்தகைய ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளினால் ஏற்பட்ட பாதக விளைவுகளையும் நாம் அனுபவித்திருக்கின்றோம்.  எனவே, நான் பொலிஸாரிடமும் ஏனைய அதிகாரிகளிடமும் இத்தகைய சம்பவங்களுக்கு எதிராக பாகுபாடின்றி சட்டத்தினை அமுல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன். 

இந்தப் பிரதேசங்களிலே சமாதானமும் அமைதியும் பேணப்படுவதனை சமயத் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். அதேவேளை,  இச்சம்பவங்களின் நிமித்தம் கடும்போக்காளர்களின் கைகள் ஓங்காமல் இருப்பதும் உறுதிசெய்யப்பட வேண்டும். 

இச்சந்தர்ப்பத்தில் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையின் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டும் வகையில் அமைதியைக் கடைப்பிடித்து நடந்துகொள்ளுமாறு அம்பாறை மற்றும் ஏனைய பிரதேசங்களிலுள்ள மக்களிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார். 

No comments

Powered by Blogger.