Header Ads



செப்டெம்பரில் மாகாணத் தேர்தல்..?

""மாகாண சபைகளுக்கான தேர்தல் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன'' என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 

தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

"மாகாண சபைத் தேர்தல் செப்டெம்பர் மாதத்தில் நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால், அந்தத் தேர்தல் ஒரே தடவையில் நடத்தப்படுமா அல்லது தனித்தனி மாகாணங்களில் நடத்தப்படுமா என்பது குறித்த தீர்மானங்கள் எட்டப்படவில்லை.

நடந்துமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலம் அண்மையில் திருத்தம் செய்யப்பட்ட புதிய சட்டத்துக்கமைவாக இடம்பெற்றமையால் தேர்தலில் தெரிவான பெண் வேட்பாளர்களுக்கு ஆசனப் பங்கீட்டை வழங்கும் செயற்பாடுகளில் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்து 25 வீத பெண் பிரதிநிதித்துவம் கிடைக்காவிட்டாலும் சபைகளை நடத்திச்செல்ல முடியும் என்றவாறான திருத்தங்களைக் கொண்டுவரும் பட்சத்தில் மாத்திரேமே முரண்பாடுகளைக் களையமுடியும்.

எவ்வாறிருப்பினும், உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முழுமையான முடிவுகள் எதிர்வரும் 20ஆம் திகதி உரிய தரப்புகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன. இதன்போது தொகுதி மற்றும் விகிதாசார அடிப்படையில் பெறப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்படும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சர்வஜன வாக்கெடுப்பு என்று சில தரப்புகளால் அர்த்தப்படுத்தப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்று வெற்றிபெறும் தரப்புகள் இவ்வாறு கூறிக்கொள்ள முடியும். ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தலை அவ்வாறு அர்த்தப்படுத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் எவ்வாறாக இருந்தாலும் தேர்தல் திணைக்களம் சுதந்திரமாகவே செயற்படும்'' என்றார்.

No comments

Powered by Blogger.