வாக்குகளை கொள்ளையிட முயற்சிப்போர், சுட்டுக்கொலை செய்யப்படுவரென எச்சரிக்கை
வாக்குகளை கொள்ளையிட முயற்சிப்போரை சுட்டுக் கொலை செய்ய முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர, கொழும்பில் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
வாக்களிப்பு நிலையத்திற்குள் தனிப்பட்ட நபர் அல்லது குழுவொன்று அத்துமீறி பிரவேசித்து வாக்குகளை கொள்ளையிட முயற்சித்தால் அவ்வாறானவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி அவர்களை கொலை செய்வது வரையில் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 95 மற்றும் 96ம் சரத்துக்களில் அடிப்படையில் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் ஆயுதம் தரித்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் பணிகளுக்கு மட்டுமன்றி பாதுகாப்பு கடமைகளுக்காகவும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்ட 42 வேட்பாளர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
Post a Comment