மஹிந்தவை முறியடிக்க, ரணில் விலகவேண்டும் - ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலம்பெற்றுள்ளமையினால் அவரது செயற்பாடுகளை முறியடிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இதனால் பிரதமர் பதவியிலிருந்து தாங்கள் விலகி கரு ஜெயசூரியவை பிரதமராக நியமித்து நல்லாட்சியை கொண்டுசெல்வதே சிறந்தது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது பிரதமருடன் அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, மங்கள சமரவீர, சாகல ரத்நாயக்க ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஜனாதிபதியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மகிந்தர அமரவீர பங்கேற்றுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தலில் மஹிந்த அணியினர் வெற்றி பெற்றமை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் போதே மஹிந்த பலம் பெற்றுள்ளமையினால் அவரது செயற்பாடுகளை முறியடிக்கும் வகையில் நாம் முடிவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் கரு ஜெயசூரியவை பிரதமராக்கி அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுப்பதே சிறந்தது என்று ஜனாதிபதி பிரதமரிடம் சுட்டிக்காட்டியதாக நம்பகரமாக தெரிய வருகின்றது.
ஜனாதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்ததையடுத்து அமைச்சர் மங்கள சமரவீர இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அவ்வாறு செயற்பட முடியாது என்றும் நாங்கள் தனித்து ஆட்சி அமைப்பதற்கு தயார் என்றும் அவர் சுட்டிக்காட்டியதாக தெரியவருகின்றது.
இந்தச் சந்திப்பின்போது ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்க முயன்று அதற்கு சிறிலங்கா சதந்திரக் கட்சியினர் யாராவது ஆதரவு வழங்கினால் அத்தகையவர்களை அமைச்சர்களாக நியமிக்க நான் இணங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment