Header Ads



மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்க வேண்டும் - சம்பிக்க

ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அமைப்பும் இணைந்த கூட்டணி நாட்டை ஆட்சி செய்வதனையே மக்கள் விரும்புவதாக ஜாதிக ஹெல உருமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஆட்சியமைக்கும் இக்கூட்டணி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயை எதிர்க் கட்சியாகவும் மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

 “உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறுகள் நடைமுறையிலுள்ள அரசாங்கம் மீதான நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளது. இதனால் தற்போதைய  அரசில் பாரிய மாற்றம் முன்னெடுக்கப்பட வேண்டியது கட்டாயம். எதிர்வரும் 18 மாதங்களுக்குள் அரசாங்கம் உரிய முறையில் இதனை அணுக வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் கொள்கைகளில் மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும். நாட்டை மேலும் பலம் பொருந்தியதாக்குவதற்கு திறமையும் நுட்பமும் நிறைந்த இளைஞர்களுக்கு கட்சியில் வாய்ப்பளிக்க வேண்டும். அதேநேரம் நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதற்காகவும் கட்சி பாடுபட வேண்டும். இல்லையேல் ஐக்கிய தேசியக் கட்சி இவ்வருடம் செப்டம்பரிலும் அடுத்த வருடம் ஏப்ரலிலும் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலிலும் தோல்வியை சந்திக்க நேரிடும்.

அதனைத் தொடர்ந்து 2020 இல் ஆட்சியைக் கைப்பற்றுவதென்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெறும் கனவாகவே இருக்கும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும் உண்மையில் அது சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குரிய வெற்றியாகவே ஜாதிக ஹெலஉருமய கருதுகின்றது.

எவ்வாறாயினும் தற்போது மக்களின் ஆணையை ஏற்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அமைப்புக்கும் இடையில் கூட்டணியொன்றை அமைப்பதுவே இதற்குரிய சிறந்த தீர்வாக அமையும்.“ எனக்கு குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.