போனஸ் ஆசனங்களில் முறைகேடு - வெடிக்கிறது புது சர்ச்சை
போனஸ் ஆசனங்களை வழங்குவதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போனஸ் ஆசன ஒதுக்கீடு தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போனஸ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நீதிமன்றின் உதவியை நாட திட்டமிட்டுள்ளோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது மஹர பிரதேச சபையின் 32 தொகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 31 தொகுதிகளில் வெற்றியீட்டியுள்ளது. எமக்கு போனஸ் ஆசனங்கள் வழங்கப்படவில்லை.
எனினும், ஒரு ஆசனத்தை மட்டும் வெற்றியீட்டிய ஐக்கிய தேசியக் கட்சிக்கு 14 போனஸ் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று களனி பிரதேச சபையின் 23 தொகுதிகளில் 21 தொகுதிகளை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வென்றுள்ளது. போனஸ் ஆசனம் வழங்கப்படவில்லை.
மாறாக 200 வாக்குகளுக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று உறுப்பினர்களுக்கு போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றியீட்டிய தொகுதிகளில் போனஸ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்வதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆராய்ந்து நீதிமன்றின் உதவி நாடப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
Post a Comment