அடுத்த 48 மணிநேரமும் முக்கியமானவை
அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கான தீர்வினை எட்டுவதற்கு முக்கியமான சந்திப்புக்களும், பேச்சுக்களும் இடம்பெற்று வருவதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்தாம் திகதி நடந்த இலங்கை உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகிய நாளில் இருந்து கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இலங்கை ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறத் தவறியதும், மகிந்த தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியினரின் புதிய கட்சி பெற்றுக் கொண்ட வெற்றியும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தல் முடிவுகள் நெருக்கடிகளை ஏற்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்கு வந்தது ஆபத்து, பிரதமர் பதவி மட்டுமல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலக வேண்டும் என அந்தக் கட்சியினரே நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார்.
இன்னொரு புறத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில் அடுத்தடுத்து நடந்த முக்கிய பேச்சுக்களும், சந்திப்புக்களும் திருப்பத்தை ஏற்படுத்தும், ஆட்சி மாறும் என்று நாட்டில் பல்வேறு கருத்துக் வந்து கொண்டிருந்தன.
இதற்கிடையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்பு கொண்டு பதவி விலகப் போகிறீர்களா? என்று கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை ரணில் விக்ரமசிங்கவும் உறுதிப்படுத்தியிருந்தார்.
அந்தளவிற்கு உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததை உணர முடிகின்றது. இந்நிலையில் தான் பதவியில் நீடிப்பேன் என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கான நெருக்கடி நிலைகளை புரிந்து கொள்ளுமாறும் பிரதமர் தன் கட்சியினருடனான கலந்துரையாடலில் தெரிவித்திருக்கிறார்.
ஆனாலும், குழப்பமான சூழ்நிலைக்கு இன்னமும் முடிவு கிடைக்கவில்லை. இந்த நிலையில் எதிர்வரும் 48 மணிநேரத்தில் அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைக்கு தீர்வு கிடைக்கும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி எதிர்பார்ப்பதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
கூட்டு எதிரணி அமைச்சு பதவிகளை ஏற்று கொள்ள இணங்கினால், நிலையான அரசாங்கம் ஒன்றை அமைக்க எந்த விதமான பிரச்சினைகளும் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று இரவு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருக்கிறது.
எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எந்த ஒரு நிலையிலும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ சுதந்திர கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் 48மணிநேரத்தில் அரசாங்கம் முக்கியமான தீர்மானத்திற்கு வரவிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் இது தொடர்பில் கருத்து வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment