வீதி போக்குவரத்து, அபராதம் அதிகரிப்பு (குற்றங்களின் விபரம் இணைப்பு)
கடந்த பாதீட்டின்போது முன்வைக்கப்பட்ட வீதி போக்குவரத்து அபராதம் தொடர்பான சீர்திருத்தம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட அபராத தொகைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை, அது குறித்த சீர்திருத்தங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் அமுலுக்கு வரும் என குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும் , புதிய அபராதத் தொகையை செயற்படுத்துவதற்காக கால அவகாசம் தேவைப்படுதாக போக்குவரத்து சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் எல்.எப்.பதிநாயக்க தெரிவித்தார்.
குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதேபோல் , அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஊடாக அதனுடன் தொடர்புடைய படிவங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதன்பின்னர் , உரிய முறையில் தயாரிக்கப்படும் படிவங்கள் நாடு பூராகவும் உள்ள காவல் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும்.
அதன் பின்னரே , திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து அபராதத்தை செயற்படுத்த முடியும் என சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட அபராத முறைக்கமைய ,
அதிக வேகத்தில் பயணித்தல் - அபராதம் 3000 ரூபா வரை,
போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடல் - அபராதம் 500 ரூபா தொடக்கம் 1000 ரூபா வரை,
பிரதான வீதியில் நீண்ட நேரமாக வாகனமொன்றின் பின்னால் பயணித்தல் - அபராதம் 20 ரூபா தொடக்கம் 1000 ரூபா வரை,
ஆசன பட்டி அணியாமல் வாகனம் செலுத்துதல் - அபராதம் 500 ரூபாய் வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து சட்டத் திருத்தத்தின் படி 33 போக்குவரத்து குற்றங்களுக்காக இவ்வாறு அபராதத் தொகை சீர்த்திருத்தப்பட்டுள்ளது.
Post a Comment