பாராளுமன்ற உறுப்பினர்களை, பாடசாலைக்கு அனுப்பச்சொல்லும் மனோ
சபாநாயகருக்கு நான் ஒரு யோசனை சொல்கின் றேன். எமது நாட்டின் பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களையும் பாடசாலைகளுக்கு அனுப்புங்கள். மீண்டும் பாடசாலைக்கு சென்றாவது அவர்கள் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள முயற்சிக்கட்டும் என அமைச்சர் மனோகணேஷன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - டட்லி சேனாநாயக்க வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற சகோதரத்துவ தைப்பொங்கல் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எமது நாட்டின் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் அமைச்சர்களுக்கிடையிலும் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலும் மல்யுத்தம் இடம்பெற்றது. இவர்கள் பாடசாலை மாணவர்களைப் போல் பாராளுமன்றத்தில் சண்டையிட்டுக் கொள்கின்றனர். அது மாத்திரமல்ல. நேற்று முன்தினம் அமைச்சரவையில் ஜனாதிபதி மனம் வருந்தும் படியான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவ்வாறான சம்பவங்களை நினைத்து நான் வெட்கப்படுகின்றேன்.
சக வாழ்வு என்பது இனம், மதம் மற்றும் மொழி ஆகியவற்றுக்குள் மாத்திரம் கட்டுப்பட்டதாக இருக்கக் கூடாது. இனம், மதம் , மொழி என்பவற்றைக் கடந்து அரசியலிலும் சக வாழ்வு என்பது அத்தியாவசியமானதாகும். நாட்டின் பிரஜைகள் மாத்திரமன்றி ஜனாதிபதி முதற்கொண்டு பிரதமர் வரை அனைவரும் சகவாழ்வை பின்பற்ற வேண்டும்.
சாதாரண மக்களிடத்தில் இப்பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் தற்போது சகோதர மொழிப்பாடசாலை ஒன்றில் தைப்பொங்கல் தினத்தை மாணவர்கள் ஒற்றுமையுடன் கொண்டாடுகின்றனர். இவர்களைப் பார்த்து அமைச்சர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் நான் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு வேண்டு கோள் விடுகின்றேன். தயவு செய்து பாடசாலை மாணவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பாதீர்கள். மாணவர்களின் ஒழுக்கத்திற்கு அது பாதுகாப்பல்ல.
இலங்கையின் கடந்த கால அரசியல் தலைவர்களின் கருத்தின் படி எமது நாட்டை வெகு விரைவில் இனம், மதம், மொழி என்பவற்றைக் கடந்து அனைத்து பிரஜைகளையும் உள்ளடக்கிய இலங்கையர் என்ற இனத்தின் கீழ் ஒன்றிணைக்க வேண்டும்.
மனோ, பாடசாலைக்கு அல்ல சிலரை பைத்தியகார ஆசுப்பத்திரிக்கும் பலரை பாலர் பாடசாலைக்கும் அனுப்ப வேணும் சகோதரா.
ReplyDelete