'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' - பராளுமன்றில் சர்ச்சை
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் 6000 இற்கும் மேற்பட்ட பக்கங் கள் இருப்பதாக ஜனாதிபதி பொதுக் கூட்டமொன்றில் கூறியுள்ளார். அப்படியாயின் பாராளுமன்றத்திற்கு பூரணமான அறிக்கையொன்று கிடைக்கவில்லை. இதனால் ஜனாதிபதியின் செயலாளர் பாராளுமன்றத்திற்கு பொய்யுரைத்துள்ளார் என்று நேற்று கூட்டு எதிரணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தமையினால் நேற்று ஆளும் ,எதிர்க்கட்சியினருக்கு இடையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரை பாராளுமன்றத்திற்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
பாராளுமன்றத்தில் நேற்று பந்துல குணவர்தன் எம்.பி எழுப்பிய ஒழுங்கு பிரச்சினையை அடுத்தே சபையில் இந்த சர்ச்சை ஏற்பட்டது. இதன்போது பந்துல குணவர்தன எம்.பி கூறுகையில்,
மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைக்கபெற்றது. எனினும் இந்த அறிக்கை பூரணமானதா என நேற்று (நேற்று முன் தினம்) சபையில் விவாதிக்கப்பட்டது. எனினும் நேற்று (நேற்று முன் தினம்) பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை 6000 பக்கங்களையும் விட அதிகமானது என கூறியிருந்தார். எனினும் எமக்கு பூரணமான அறிக்கையொன்று கிடைக்கவில்லை. அப்படி இருக்கும் போது எப்படி நாம் விவாதம் செய்வது என்றார்.
இதனையடுத்து எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல,
மத்திய வங்கி பிணைமுறி தொடர்பாக ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையை ஏற்க வேண்டும். இந்த அறிக்கையில் பக்கம் குறைவாக உள்ளது என எதிரணியினர் கூறினால் விவாதம் கிடையாது என்றார்.
இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய கூறுகையில்,
ஜனாதிபதி செயலாளர் தனக்கு அனுப்பிய அறிக்கயையே நான் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தேன். எனினும் பூரண அறிக்கையை பெற்றுக்கொள்வது தொடர்பில் நான் ஜனாதிபதியின் செயலாளரிடம் வினவினேன். சட்டமா அதிபரின் யோசனையின் பிரகாரம் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அறிக்கையின் மிகுதி தொகுதி தற்போது அச்சிடப்பட்டு வருவதனால் விரைவில் சமர்ப்பித்தாக ஜனாதிபதி செயலாளர் தனக்கு அறிவித்துள்ளார். ஆகவே குறித்த அறிக்கை எமக்கு விரைவில் கிடைக்கபெறும் என்றார்.
இதனையடுத்து எழுந்து பேசிய அநுர குமார திஸநாயக்க எம்.பி,
இந்த விவகாரம் தொடர்பில் நேற்று (நேற்று முன் தினம்) நாம் விவாதம் செய்தோம். அப்போது பாராளுமன்றத்தில் நேற்று (நேற்று முன் தினம்) முன்வைக்கப்பட்ட அறிக்கைக்கு மேலதிகமாக ஏதும் இருந்தால் ஜனாதிபதி செயலாளரை பாராளுமன்றத்திற்கு அழைத்து வந்து விசாரிக்க வேண்டும் என நான் கூறியிருந்தேன். இந்நிலையில் தற்போது ஜனாதிபதி செயலாளர் தனது பொறுப்பை மீறி செயற்பட்டு பாராளுமன்றத்திற்கு பொய்யுரைத்துள்ளார். இது முற்றிலும் தவறாகும். ஆகவே பாராளுமன்றத்திற்கு பொய்யுரைத்தமை தொடர்பில் ஜனாதிபதி செயலாளரை பாராளுமன்றத்திற்கு அழைத்து விசாரிக்க வேண்டும். இதன்படி ஜனாதிபதி ஆணைக்குழுவின் பூரண அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக கேட்டறிய ஜனாதிபதி செயலாளரை அழைத்து விசாரிக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது . ஒரு நாளில் இதுதான் பூரண அறிக்கை என்றும் அடுத்த நாளில் இந்த அறிக்கையில் மேலும் மிகுதி உள்ளது என எப்படி ஜனாதிபதி செயலகத்தினால் கூற முடியாது என்றார்.
இதனையடுத்து எழுந்த தினேஷ் குணவர்தன எம்.பி,
மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான அறிக்கையில் 6000 பக்கங்கள் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அப்படியாயின் எமக்கு தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் 6000 பக்கங்கள் கிடையாது. ஆகவே ஜனாதிபதி செயலாளர் எமக்கு பதிலளிக்க வேண்டும் என்றார்.
பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன்னர் தகவல் அறியும் சட்டத்தை பிரயோகம் செய்து ஒருவர் குறித்த அறிக்கையை பெற்றுள்ளதாக ஊடகங்களின் ஊடாக கூறியுள்ளார். இதன் நியாயம் என்ன? என்று பந்துல குணவர்தன கேள்வி எழுப்பினார்.
இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய பதிலளிக்கும் போது,
பாராளுமன்றத்திற்கு வழங்கப்படுவதற்கு முன்னர் யாருக்கும் குறித்த அறிக்கை வழங்கப்படவில்லை என்றார்.
இதன்போது அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகையில்
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பக்கம் குறைவான விடயம் ஊடகங்களில் வேறு விடயமாக செல்ல கூடும். எனினும் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரையோ அல்லது ஏனைய அதிகாரிகளையோ பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு நாம் தயாராக உள்ளோம். எனினும் இந்த அறிக்கையில் சில விடயங்களை வெளியிட்டால் அது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமையும என்பதன் காரணமாகவே சில விடயங்களை ஜனாதிபதி வெளியிடவில்லை. எனினும் பாராளுமன்றத்திற்கு குறித்த பூரண அறிக்கையை நாம் வெளியிடுவோம். பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன்னர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் அறிக்கை வழங்கவில்லை. அது முற்றிலும் தவறான கருத்தாகும் என்றார்.
Post a Comment