Header Ads



முஸ்லிம்களின் தலையில், மிளகாய் அரைப்பு - கொந்தளிக்கும் நாமல்

கிழக்கு மாகாணத்தில் நாம் அமைத்துகொடுத்த 43 பள்ளியால்கள் பற்றி வாய்திறக்காதவர்கள் எமது காலத்தில் கல் வீசப்பட்ட பள்ளிவாயல்களைப் பற்றியே பேசினார்கள்.

லசந்த, எக்னெலிகொட,தாஜுதீன் போன்ற விவகாரங்களில் சந்தேக  நபர்கள் என பலரை கைது செய்து விசாரணைகள் செய்கின்ற போதும், மூன்று பேர் மரணித்த அளுத்கமை கலவரம் தொடர்பில் ஒருவரைக்கூட இந்த அரசாங்கத்தால் கைது செய்ய முடியாது போனது ஏன் என  ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கேள்வி எழுப்பினார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்...

அளுத்கமை சம்பவம் என்பது இலங்கையில் இடம்பெற்ற மிகவும் பாரதூரமான சம்பவம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.அது தொடர்பில் சரியான விசாரணைகள் மேற்கொண்டு, அவற்றை தோற்றுவித்தவர்களை கைது செய்ய வேண்டும்.அவ்வாறு அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால், இன்று கிந்தோட்டை பிரச்னையை கூட தவிர்த்திருக்கலாம்.

எமது ஆட்சி காலப்பகுதியிலேயே அளுத்கமை சம்பவம் இடம்பெற்றது. இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சில முஸ்லிம் அரசியல் வாதிகள் மிகக் கடுமையாக எங்களுடன் வாக்குவாதப்பட்டனர். அந் நேரத்தில், நாங்கள் நடவடிக்கை எடுக்க முயன்ற போது,அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றோர் எமக்கு தடையாக இருந்தனர்.

அமைச்சர் சம்பிக்க போன்றோர் தடையாக இருந்தார்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும் அவற்றை விசாரணை செய்து தண்டனை வழங்க போதுமான கால அவகாசம் இருக்கவில்லை.  எமது காலப்பகுதியில் அங்கு இடம்பெற்ற சேதமாக்கப்பட்டவைகளுக்கான நஷ்டயீட்டை வழங்கியிருந்தோம். இதனை அங்குள்ளவர்கள் யாருமே மறுக்க முடியாது.

இவ்வாட்சி காலப்பகுதியில் கிந்தோட்டையில் ஒரு பாரிய கலவரம் மூண்டது. இது தொடர்பில் முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஜனாதிபதியாகிய மைத்திரி எந்த வித கண்டனங்களும் தெரிவிக்கவில்லை.இந்த அரசாங்கமானது எந்தவிதமான நஸ்டயீட்டையும் இதுவரை வழங்கவுமில்லை. இதனை ஒப்பிட்டு பார்த்தாலே நாங்கள் யார்? அவர்கள் யார்? என்பதை முஸ்லிம்கள் அறிந்துகொள்ள முடியும்.

அளுத்கமை சம்பவம் தொடர்பில் ஒரு விசாரணை ஆணைக்குழுவை இதுவரை அமைக்கவில்லை . கிந்தோட்டை சம்பவத்துக்கும் ஒரு குழுவை அமைக்கவில்லை. இவ்விடயங்கள் தொடர்பான விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என்று கூற முடியுமா? பொய்யான விடய்ங்களை கூறி முஸ்லிம்கள் தலையில் மிளகாய் அரைத்து கொண்டிருகிறார்கள். 

தாஜுதீன் மரண சம்பவம் தொடர்பில் பெரும் போலிஸ் அதிகாரிகள் கூட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.அதில் காட்டும் கரிசனை, ஏன் இவ்வரசினருக்கு இவ்விடயங்களில் இல்லை. 

உண்மை என்னவென்றால், இவை தொடர்பில் ஏதேனும் விசாரணை நடத்தினால், அதன் பாதிப்பு அவர்களை நோக்கி வரும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.அலுத்கமை சூத்திரதாரிகளை கைது செய்தால் அவர்கள் சம்பிகவையும் ராஜிதவையும் நோக்கி விரல் நீட்டுவார்கள்.அதனால் எவரையும் இந்த அரசு கைது செய்ய மாட்டார்கள்.

மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் கிழக்கில் 43 பள்ளிவாயல்களை புணரமைத்தார் அதைப்பற்றி பேசாதரவர்கள் எமது காலத்தில் கல்லெரியப்பட்ட 3 பள்ளிவாயல்களை பற்றியே விமர்சித்தார்கள்.

அன்று அரபு நாடுகள் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுடனான நல்லுறவு காரணமாக எமது நாட்டுக்கு உதவி செய்தார்கள்.

நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களை கறிவேப்பிலையாகவே  பயன்படுத்தி வருகிறது. எதிர்வரும் தேர்தலிலாவது உங்களை ஏமாற்றிய, ஏமாற்றிக்கொண்டிருக்கும் இவ்வாட்சியாளர்களுக்கு முஸ்லிம்கள் பாடம் புகட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.