திருப்பதி கோவிலில் மைத்திரிபாலவுக்கும், மகிந்தவுக்கும் என்ன வேலையிருக்கின்றது?
ஈழ மண்ணில், தமிழ் மக்களின் ஆயிரக்கணக்கான வழிபாட்டுத் தளங்களை இலங்கை இராணுவம் குண்டு வீசி அழித்த போது யாரும் குரல் கொடுக்கவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது 90 வீதமான இந்து மக்களே கொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்து பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அவருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்து மத கடவுளை கவிஞர் வைரமுத்து இழிவுப் படுத்தி பேசிவிட்டதாகவும், அதற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சீமான், கவிஞர் வைரமுத்துவிற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டிருந்ததுடன், தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்திற்கு இன்று பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளார்கள். ஆனால் இலங்கையில் இடம்பெற்ற போரில் இந்து மக்கள் கொல்லப்பட்ட போது யாரும் குரல்கொடுக்கவில்லை.
இன்று இந்து மத உணர்வோடு குரல்கொடுக்கும் அனைவரும் ஏன் அன்று இந்து மக்கள் இலங்கையில் கொன்று குவிக்கப்பட்ட போது யாரும் குரல் கொடுக்க முன்வரவில்லை?
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர புத்த மத்தை ஏற்றுக்கொண்டு, அதன் வழியில் செல்கின்றனர்.
அவர்களுக்கு திருப்பதி கோவிலில் என்ன வேலையிருக்கின்றது? இதை ஏன் யாரும் கேட்கவில்லையே. சகோதர இன மக்களை இலங்கையில் கொன்றுக் குவித்தது ஆந்திர முதலமைச்சர சந்திரபாபு நாயுடுக்கு தெரியாதா?
மகிந்த ராஜபக்ச ஒரு இனப்படுகொலையாளி என்பதை நிரூபிக்க தமிழகத்தில் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவரை ஆந்திர மாநிலத்துக்குள் அனுமதிக்க கூடாது என்பது அவருக்கு தெரியாதா?
ஆனாலும், அவர்களுக்கு பலத்த பாதுகப்புக்கு மத்தியில் திருப்பதி கோவிலில் வழிபடுவதற்கு அனுமதிகொடுக்கப்படுகின்றது. இலங்கையை ஆட்சி செய்துகொண்டிருப்பவர்கள் இங்கிருந்து சென்ற நாயக்க பரம்பரையைச் சேர்ந்தவர்களே.
அவர்கள் இலங்கைக்குச் சென்று பௌத்த மதத்தை தழுவிக்கொண்டு, சிங்கள மொழியை கற்றுக்கொண்டு இலங்கையை ஆட்சி செய்கின்றார்கள். இலங்கையில் தமிழ் பேசும் யாரும் ஆட்சி செய்ய முடியாது.
ஈழ மண்ணில், தமிழ் மக்களின் ஆயிரக்கணக்கான வழிபாட்டுத் தளங்களை இலங்கை இராணுவம் குண்டு வீசி அழித்த போது யாரும் குரல் கொடுக்கவில்லை.
ஆனால், ஒருவர் கூறிய விடயத்தை மேற்கோள்காட்டி பேசிய கவிஞர் வைரமுத்துவை இன்று பலரும் இழிவாக பேசி வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment