Header Ads



இளவரசர் அல்-வாலித் விடுதலை..?


சவுதி அரேபியாவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளால் கைதான இளவரசர் அல்-வாலித் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவில் ஊழல் புகாரில் கைதான 11 மூத்த இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய தொழில் அதிபர்கள் உட்பட சுமார் 350 பேர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள ஐந்து மற்றும் ஏழு நட்சத்திர ஹொட்டல்களில் கைதிகளாக தங்க வைக்கப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கை, அந்நாட்டின் ஆட்சிக்கட்டில் மீதான குடும்ப அரசியலால் நடத்தப்படும் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸின் சூழ்ச்சி எனவும் சர்ச்சை கிளம்பியது.

இதற்கிடையில், கைதானவர்களில் சிலர் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டனர். முறைகேடாக சம்பாதித்த பணத்தை அரசு கருவூலத்துக்கு செலுத்தவும் அவர்கள் முன்வந்தனர்.

இதன் மூலம் மட்டும் அரசுக்கு சுமார் 100 பில்லியன் டொலர்கள் அளவுக்கு வருவாய் கிடைக்கலாம் என சவுதி ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டின் மிகப்பெரிய செல்வந்தராக கருதப்படும் இளவரசர் அல்-வாலித் பின் தலால் மூன்று மாதங்களுக்கு பின்னர் இன்று -27- விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசர் அல்-வாலித்தின் நெருங்கிய நண்பர் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக பிரபல செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஆனால் அவர் என்ன நிபந்தனையின்கீழ் விடுதலை செய்யப்பட்டார்? என்ற விபரத்தை தெரிவிக்க சவுதி அரேபியா அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இருப்பினும் தன்மீதான ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகள் 95 விழுக்காடு முடிவுக்கு வந்துள்ளதாகவும், தம்மை துன்புறுத்தியதாக வெளியான தகவல்கள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.