Header Ads



ஜனாதிபதிக்கு சர்வதேச விருது, எந்த வகையில் பொருத்தமாகும்..? நாமல்

பாரிய மதுபான உற்பத்தி நிலையத்தையும், பியருக்கு வரி குறைப்பையும், பியரை சாதாரண கடைகளில் விற்குமளவு ஏற்பாடுகளை செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனவுக்கு, போதை ஒழித்ததாக கூறி சர்வதேச விருது கிடைப்பதை போன்ற நகைச்சுவை வேறேதுமில்லையென ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருளுக்கு எதிரான அரச சார்பற்ற அமைப்பின் சர்வதேச சம்மேளத்தினால் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு போதைபொருள் பாவனையை ஒழிக்க முன்னெடுத்த முயற்சிக்கான விருது கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த செய்தியை போன்ற ஒரு நகைச்சுவையை, நான் வேறு எங்கும் கேள்வியுற்றதில்லை.

இலங்கையில் கல்குடா பிரதேசத்தில் மிக பிரமாண்டமான ஒரு மதுபான உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பெற்று வருகிறது. இந்த மதுபான தொழிற்சாலை மத்திய அரசின் நேரடி அங்கீகாரம் பெற்றே அமைக்கப்படுகிறது. இந்த மதுபான தொழிற்சாலை நிறுவப்படுவதை எதிர்த்து அந்த மக்கள் குரல் கொடுக்கின்ற போதும், அது இவ்வரசின் காதுகளில் விழுவதாக இல்லை.

இம்முறை கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் பியருக்கான வரியை குறைத்து, இவ்வரசு பியர் அருந்துவதை ஊக்குவித்துள்ளது. அது மாத்திரமன்றி சாதாரண கடைகளில் பியர் விற்பனை செய்யும் திட்டம் சில காலங்கள் முன்பு முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இப்படியான ஒரு நாட்டின் அரச தலைவருக்கு, இவ் விருது எந்த வகையில் பொருத்தமாகும்? 

உள்ரங்கத்தை ஆராயாது இவர்கள் மேற்கொள்ளும் ஒரு சில வெளிரங்க பிரச்சாரத்தை பார்த்து இவ்விருதை வழங்கினார்களோ தெரியவில்லை. இவர்களின் சொல்லும் செயலும் முற்றிலும் வேறுபட்டவை தானே!

நாம் ஆட்சியை கைப்பற்றிய போது போதைப் பொருள் பாவனையாளர்களும், பாதள உலகத்தினரும் மலிந்து காணப்பட்டனர். கொழும்பு போன்ற பிரதேசங்களில் இரவு நேரங்களில் மக்கள் பிரயாணம் செய்வதற்கு அஞ்சினர். எமது ஆட்சியின் இறுதி காலப்பகுதியில் இவர்கள் இருவரினதும் முகவரிகளினையே இல்லாமல் ஆக்கி இருந்தோம். இப்போது மீண்டும் இவர்கள் இருவரும் நாட்டுக்குள் முன்னர் போன்று மலிந்துவிட்டனர். இதனை கொழும்பு போன்ற பிரதேசங்களில் வாழ்பவர்கள் சிறிதும் அச்சமின்றி ஏற்றுக்கொள்வர்.

No comments

Powered by Blogger.