‘அரசாங்கம் பதவி துறக்க வேண்டும்’ - வலுக்கிறது கோரிக்கை
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கலின் போது, ஏற்பட்ட மோசடிகள் தொடர்பிலான முழுப்பொறுப்பையும் பிரதமரே ஏற்க வேண்டும் என்பதுடன், இந்த அரசாங்கமே பதவி துறக்க வேண்டும்” என, நுகர்வோர் உரிமையைப் பாதுகாக்கும் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
“மத்திய வங்கியின் செயற்பாடுகளைச் சீர்குலைப்பதற்கு, அரசாங்கத்தின் அனுசரணை கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தவர்களை, மத்திய வங்கிக்குச் சேவையில் இணைத்துக்கொண்டவர் பிரதமராவார்.
“பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள், தண்டிக்கப்பட வேண்டியவர்களென, ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.
“ஆகையால், இந்தப் பிணைமுறி விவகாரம் தொடர்பிலான இந்தக் குற்றச்சாட்டை, அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொண்டு, உடனடியாக பதவி விலகவேண்டும்” என்றும் அவ்வியக்கம் கோரியுள்ளது.
“அரசாங்கத்தின் அனுசரணையில், மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதற்கும் களவெடுப்பதற்கும், மக்கள் வரிப்பணம் செலுத்தவில்லை. வரிப்பணத்தைச் செலுத்திக்கொண்டு, மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
“இவ்வாறான நிலையில், ஒரு சிலர் மட்டும், மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டி, சுகபோகங்களை அனுபவித்துள்ளமை, தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
“அரிசி விலை அதிகரிக்கும் போது, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகாரிக்கப்படும் போதும், ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனைச் செலுத்துவதற்காகவே, பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக, கடந்த காலத்தில் அறிவிக்கப்பட்டது.
“கடனைச் செலுத்துவதற்காக, நுகர்வோர் கடந்த காலங்களில் பல்வேறான துன்பங்களை அனுபவித்தனர்.
எனினும், அரசாங்கத்தின் அனுசரணையில், மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டமையால் தான், மக்கள் கடந்த காலங்களில் பல்வேறான துன்பங்களை அனுபவித்தனர் என்பது அம்பலமாகிவிட்டது” என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment