Header Ads



"சிறைக்குச் செல்லத், தயாராக இருக்கவும்"


முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை சிறைச்சாலைக்குச்செல்லத் தயாராக இருக்குமாறு கோப் கமிட்டியின் முன்னாள் தலைவர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பொரளை என்.எம். பெரேரா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போது முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய டியூ குணசேகர, மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக ரவி கருணாநாயக்க பொய்சாட்சியம் அளித்துள்ளமை விசாரணை அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்ற அதிகாரத்துடன் அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பொய்சாட்சியம் வழங்கியது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அத்துடன் ரவி கருணாநாயக்க எந்தவொரு கட்டத்திலும் உண்மை பேசியதே இல்லை. ஆரம்பத்தில் அவர் மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் மோசடி ஏதும் நடைபெறவே இல்லை என்று தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் அது தொடர்பான உண்மைகள் வெளிவந்த பின்னர் மோசடிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றார். பிணைமுறி மோசடியாளர்கள் மூலமாக மொனாக் ரெசிடன்சியில் வீடொன்றைப் பெற்றுக் கொண்டதையும் ஆரம்பத்தில் மறுத்தார்.

பின்னர் தனக்குத் தெரியாது என்று மழுப்பினார். இவ்வாறாக அனைத்து விடயங்களிலும் அவர் முன்னுக்குப் பின் முரணாக பொய் உரைத்துள்ளார்.

இப்போது மத்திய வங்கி பிணைமுறிகள் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த வகையில் இனி இது தொடர்பான சட்ட நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமே எஞ்சியுள்ளது.

எனவே இதில் இருந்து ரவி கருணாநாயக்க தப்பித்துக் கொள்ள முடியாது. அந்த வகையில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பொய்சாட்சியம் அளித்த குற்றச்சாட்டில் விரைவில் சிறைச்சாலைக்குச் செல்லத் தயாராக இருக்கவேண்டும் என்றும் டியூ குணசேகர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.