Header Ads



தீ வைக்க, மஹிந்த டீம் துடிக்கிறது - மைத்திரிபால


பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை தீமூட்டிக் கொளுத்திவிட்டு தண்டனைகளிலிருந்து தப்புவதற்காகவே மீண்டும் ஆட்சிபீடமேறுவதற்கு மஹிந்த அணி துடிக்கின்றது எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கையின் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று வெள்ளவாயவில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

""ஜி.எல். பீரிஸ் என்பவர் ஒரு பேராசிரியர். சட்டம் படித்தவர் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் அவருக்கு "அ'னாகூட தெரியாது. இவ்வாறானவர்கள்தான் இன்று பண்டாரநாயக்கவின் கொள்கை பற்றி பேசுகின்றனர்.

ஆட்சியில் இருக்கும்போது அடித்த கொள்ளைகளே அளவற்றதாக இருக்கும் நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியன் நிறத்தையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மஹிந்த அணி) கொள்ளையடித்துள்ளது. இப்படியான கொள்ளையர்கள்தான் இன்று பண்டாரநாயக்கவின் பயணம் குறித்து பேசுகின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஊழல், மோசடிகளை ஒழித்து நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது பிரதான நோக்கமாகும். அந்த இலக்கை அடைந்தே தீருவேன். அதற்கு மக்களும் ஆதரவு வழங்கவேண்டும். பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான 34 விசாரணை அறிக்கைகளும் வெளிவந்துள்ளன. பெருந்தலைகளும் மோசடியுடன் தொடர்புபட்டுள்ளன. எனவே, தகுதி தராதரம் பாராது குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை உறுதியாக கூறிவைக்க விரும்புகின்றேன்.

அத்துடன், பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கையையும் முழுமையாக அமுல்படுத்துவேன். ஜனாதிபதி என்ற வகையில் அது எனது கடமையும்கூட. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக ஒரு குழு முயற்சிக்கின்றது. ஆட்சியிலிருந்தபோது செய்த மோசடிகளை மூடிமறைப்பதற்காகவும், விசாரணை அறிக்கைகளைக் கொளுத்திவிட்டு, தண்டனையிலிருந்து தப்புவதற்காகவுமே இவ்வாறு அந்தக் குழு துடிக்கின்றது. இதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அதேவேளை, மகாநாயக்க தேரர்களின் சொற்படியே செயற்படுவேன். அவர்கள் சொல்வதை நிச்சயம் செய்வேன். ஏனைய மதத் தலைவர்களின் கருத்துகளுக்கும் செவிமடுப்பேன். நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத வகையில் நல்லிணக்க நடவடிக்கைகள் இடம்பெறும்'' என்றார் ஜனாதிபதி.

1 comment:

  1. சும்மா பேசிப்பேசி அலட்டாமல் விளக்கத்தை அவசரமாக செய்து காட்டும் ஐயா.

    ReplyDelete

Powered by Blogger.