கதிர்காமத்தில் பதற்றம் தொடருகிறது - 63 பேர் கைது
கதிர்காமத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இரகசிய பொலிஸ் குழுவொன்று குறித்த பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இன்று முற்பகல் அவர்கள் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், கதிர்காமம் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள குழுவினரை கலைக்க மீண்டும் கண்ணீர்ப் புகை தாக்குதலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் எதிர்ப்பில் ஈடுபட்ட 63 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
48 ஆண்களும் மற்றும் 15 பெண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பிரதேசத்திற்கு பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
கதிர்காமத்தில் நேற்று இரவு பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற நபர் மீது மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் குறித்த நபர் உயிரிழந்தார்.
பின்னர் குறித்த பிரதேசத்தில் பொலிஸாருக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
இதேவேளை, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment