Header Ads



இளைய தலைமுறையின் வழிகாட்டி N.M. அமீன்


 – அனஸ் அப்பாஸ் –

கலாபூஷண விருது எழுத்து, சங்கீதம், திரைப்படம், நாடகம், சித்திரம், சிலம்படி இப்படி கலைத் துறைகளில் பங்களித்தவர்களுக்கு பல்வேறு மட்டத்தில் வழங்கப்படுகின்றது. இந் நிலையில் மறைந்த ஆயுர்வேத வைத்தியர் S.A.R. நிஸாம்தீன் உடையார் – ஹாஜியாணி மர்யம் பீபி ஆகியோரின் மூத்த புதல்வராக அரநாயக்க, தல்கஸ்பிட்டியில் பிறந்த மக்கள் அபிமானம் வென்ற சிரேஷ்ட ஊடகவியலாளர், முஸ்லிம் சமூகத்தின் மூத்த தலைமைகளுள் ஒருவராகத் திகழும் சமூக செயற்பாட்டாளர் அல்-ஹாஜ் N.M. அமீன் அவர்கள் அண்மையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற தேசிய நிகழ்வில் கலாபூஷண விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

60 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களால் கலாசார திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்களில் இருந்து தெரிவாகி, பேராசிரியர்கள் ஆரியரத்ன களுஆரச்சி, பெட்ரிக் ரத்னாயக்க, ஜடசுமண திஸ்ஸாநாயக்க ஆகிய மூவர் அடங்கிய குழுவால் இருதிப்படுத்தப்படுபவர்களுக்கே இதுவரை விருதுகள் கிடைத்தன. இம்முறை மேலதிகமாக இக்குழுவால் 40 பேர் விண்ணப்பமின்றி கலாபூஷண விருதுக்கு தகுதிபெற்றனர். அந்த 40 பேரில் விருது பெரும் ஒரே ஒரு முஸ்லிம் அல்-ஹாஜ் N.M. அமீன் அவர்கள்.


அடைவுகளே ஒரு மனிதனை சமூகத்துக்கு அடையாளப்படுத்தும். கலாபூஷணம் அமீன் அவர்கள் தனது அடைவுகளால் வென்ற அடையாளங்களையும் ஒரு அடைவாகப் பெற்றிருப்பதே சிறப்புக்குரிய அம்சமாக இங்கு நோக்க வேண்டியதாகும். ஆரம்பக்கல்வி தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயம், ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயம், மாவனெல்லை ஸாஹிராக் கல்லூரியிலும் கற்றதைத் தொடர்ந்து களனி பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார் கலாபூஷணம் அமீன். பின்னர், லேக் ஹவுஸ் பிரசுரமான தினகரன் இல் இணைந்து அங்கு முகாமைத்துவ ஆசிரியர் வரை 33 வருடங்கள் பணியின் பின் ஒய்வு பெற்றார். தற்போது நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும், பணிப்பாளராகவும் பங்காற்றுகின்றார்.

களனி பல்கலைக்கழக கற்கைக் காலத்தில் அடைவுகளும், வகித்த பதவிகளும்.

தாஜ்மஹால் சன சமூக நிலையத்தின் செயலாளர் (தல்கஸ்பிட்டிய சமூக எழுச்சித் திட்டங்கள்)
தமிழ் சங்க ஸ்தாபக பங்களிப்பு
முஸ்லிம் மஜ்லிஸ் ஸ்தாபக பங்களிப்பு
அனைத்து முஸ்லிம் மஜ்லிஸ்களதும் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களதும் களனிப் பல்கலைக்கழக பிரதிநிதி
மாணவர் சங்கத் தேர்தலில் இருமுறை வெற்றி
கலைப் பீட சங்க உதவிச் செயலாளர்
மாணவர் சங்க பத்திரிகை ஆசிரியர்
பல்கலைக்கழக கற்றலுக்குப் பின்னரான அனுபவங்களும், பதவிகளும்

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணி (ACMLYF) யின் நிர்வாக செயலாளர்
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணியின் பொதுச் செயலாளர்
ACMLYF இல் பாக்கிர் மாக்காருடன் இணைந்து 800 இற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விஜயம்
வாலிபர் ஒன்றியத்தின் செயலாளர் (மாதாந்த விரிவுரைகளை நடாத்த பங்களிப்பு (அரசியல் மேம்பாடு))
நான்கு பருவத்திற்கு மேல் வாலிபர் ஒன்றியத்தின் தலைவர்
அகதிகள் நிவாரண நிலையத்தின் செயலாளர்
இளைஞர் அமைப்புக்களின் ஒன்றியம் (பாமீஸ்) இன் உப தலைவர்
பாமீஸ் அகதிகள் நிவாரண குழு தலைவர் (லிபிய அரசு அனுசரணை)
முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் (33 அங்கத்தவர்களுடன் முஸ்லிம் மீடியா போறத்தை உருவாக்க பங்களித்தார், 21 வருடங்களில் தற்போது அங்கத்தவர்கள் சுமார் 850)
SLMMF – ACMLYF இணைந்து RRC உருவாக்கம் (24 மணி நேர சுனாமி நிவாரணம்)
RRC இன் பரிணாமத்தில் முஸ்லிம் கவுன்சில் (முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் கூட்டு) உருவாக்கம்
இலங்கை பாராளுமன்றத்தின் பத்திரிகையாளர் சங்க செயலாளர்
முஸ்லிம் கல்வி மாநாடு புனர் ஸ்தாபன பங்களிப்பு
இலங்கை தெற்காசிய ஊடக அமைப்பின் – இலங்கையின் வதிவிட அமைப்பாளர்

தற்போதைய பதவிகள்

முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா’வின் தலைவர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர்
பாலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கத்தின் உப தலைவர்
நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர்

“கடும்போக்கு அமைப்புக்களுடன் 5 வருடங்களுக்கு மேலாக கலந்துரையாடடிய அனுபவம் இருக்கின்றது. 1000 வருடங்கள் இந்நாட்டில் முஸ்லிம்கள் வாழ்ந்தபோதும் எமது வழிபாடு, நடைமுறைகள் தொடர்பில் உரிய தெளிவை பிற சமூகங்களுக்கு தெளிவுபடுத்த தவறிவிட்டோம். இதன் விளைவாக சர்வதேச நிகழ்வுகளுடன் இலங்கை முஸ்லிம்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் மனோபக்குவம் இலங்கை பெரும்பான்மையினரிடம் வளர்ந்திருக்கின்றது. இதில் ஆன்மீக இயக்கங்களுக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது. தனது வழிகாட்டலில் செயற்படும் மக்கள் தொடர்பில் இவர்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். அவர்களை நெறிப்படுத்த வேண்டும்.”

“அரசியலைப் பொருத்தமட்டத்தில் தேசிய நீரோட்டத்தில் எமது கால்கள் பதிய வேண்டும். தனித்துவ கட்சிகள் இன்றைய சூழலில் தேவையா என்பது குறித்த மீளாய்வு அவசியம். A.C.S ஹமீட் அவர்கள் குறிப்பிட்டது போல “கேக்கை வெட்டும் கத்தி எம்மிடம் இருந்தால்தான் நாம் விரும்புவதுபோல் சாப்பிட முடியும்”, தேசிய கட்சிகளில் தீர்மானமெடுத்தல் சபைகளில் நாம் பங்குபெற வேண்டும். 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், சரியான அழுத்தத்தை கொடுக்கத் தவறியதால் புதிய தேர்தல் முறையில் சிறுபான்மை பாதிக்கப்படும் அபாயம் இருக்கின்றது. எமது இளைஞர்கள் ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய தேசிய கட்சிகள் அனைத்திலும் இணைந்து போட்டியிட வேண்டும். வருகின்ற உள்ளூராட்சி தேர்தலிலும் சமூகம் பிளவுபட்டுக் கொண்டிருக்கின்றது. முன்னர் வாழ்ந்த எமது அரசியல்வாதிகள் அரசியல் ரீதியில் பிளவுபட்டாலும், சமூகம் என்று ஒன்றுபட்டு, பெரும்பான்மையுடன் சிறந்த உறவை பேணியதால் இன்று பல சலுகைகளையும், சிறந்த சட்டங்களையும் நாம் பெற்றுள்ளோம். அந்நிலை மீண்டும் உதயமாக வேண்டும்” என உங்களை நோக்கி மொழிகின்றது பல்லின உறவை சிறப்புடன் பேணும் அவரது மனசாட்சி.

கலாபூஷணம் அமீன் அவர்களின் மனைவி கொழும்பு டீ.எஸ் சேனாநாயக்க கல்லூரியில் தமிழ் பிரிவின் ஆசிரியையாக பணியாற்றி அண்மையில் ஒய்வு பெற்றார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மகன் அஸ்ஸாம் அமீன் BBC செய்திச் சேவையின் இலங்கை பொறுப்பாளராக இருக்கின்றார். மகள் அஸ்ரா திருமணமாகி தற்போது லண்டனில் வசிக்கிறார். அடுத்து, மகன் அசீம் அமீன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மாணவனாக இருக்கின்றார்.

ஒரு காலத்தில் அரசியல் ஈடுபடும் ஆர்வமும் அக்கறையும் கலாபூஷணம் அமீனுக்கு இருந்தது. சப்ரகமுவ மாகாண சபைக்கு சந்தர்ப்பமும் கிடைத்தது, இருந்தாலும் குறித்த அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டால் அது பறிபோனது. அரசியலில் ஈடுபட முடியாவிட்டாலும், சமூக சேவையில் தொடராக பங்களித்த ஆத்மா திருப்தியை தொடர்ந்தும் இளைய தலைமுறைக்கு பகிர்வதால் கலாபூஷணம் அமீன் அவர்கள் அக மகிழ்கின்றார்.

1 comment:

Powered by Blogger.