பொதுபல சேனா சொல்லியிருப்பது, சிரிப்பை தருகிறது
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களையும் புத்த பிக்குகளையும் கொன்றொழித்த பிரபாகரனை சிறந்த தலைவர் என சொல்லிக்கொண்டு அமைச்சர் ரிசாத் பதியுதீன் ராஜினாமா செய்ய வேண்டும் என பொது பல சேனா சொல்வதன் மூலம் இவர்களை இயக்குவது முஸ்லிம் விரோத டயஸ்போராவே என்பது தெட்டத்தெளிவாகிறது என உலமா கட்சித்தலைவரும் அ.இ.மக்கள் காங்கிரசின் கல்முனை மாநகர சபை மேலதிக பட்டியல் வேட்பாளருமான மௌலவி முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்தார். கட்சி தலைமையகத்தில் நடை பெற்ற கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது
அன்று தலைவர் அஷ்ரப் முஸ்லிம்களுக்கு சேவை செய்ய முற்பட்ட போது சில இனவாத பௌத்த சமய தலைவர்கள் அவருக்கெதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அவரை கட்டுப்படுத்த முயன்றது போல் பொது பல சேனா இனவாதிகள் இன்றைய முஸ்லிம் தேசிய தலைவர் அமைச்சர் ரிசாதுக்கெதிராக திட்டமிட்டு செயற்படுகின்றனர்.
வில்பத்து பிரச்சினை என்பது வேண்டுமென்றே அமைச்சர் ரிசாதை குறிவைத்து சொல்லப்படும் பொய் குற்றச்சாட்டு என்பதை அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றோர் சொல்லியும் ஒரு பொய்யை திரும்பத்திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பதற்கிணங்க தமிழ் சிங்கள இனவாதிகளால் வில்பத்துவை அமைச்சர் ரிசாத் சீரழிக்கிறார் என்ற பொய் குற்றச்சாட்டுகளை முன் வைத்து ஜனாதிபதிக்கு தலையிடி கொடுக்கின்றனர்.
இதன் மூலம் வட மாகாண முஸ்லிம்களை நிம்மதியாக வாழ விடாது அவர்களை தொடர்ந்தும் அகதிகளாகவும், நிர்க்கதியிலும் வைத்திருக்க முணையும் சில தமிழ் பேரினவாதிகளை பொது பல சேனா திருப்திப்படுத்த முயல்கிறது.
பிரபாகரனை சிறந்த தலைவர் என கூறும் பொதுபல சேனா அவர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என கூறுவதன் மூலம் அவர்கள் யாரின் அனுசரணையின் கீழ் இயங்குகின்றனர் என்பதை ஜனாதிபதியும் சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். பிரபாகரன் தனது படை முகாம்களை கொழும்பில் வைத்திருக்கவில்லை. வடக்கு கிழக்கின் காடுகளை அழித்து அதன் மத்தியிலேயே வைத்திருந்தார் என்பது கூட தெரியாத பொது பல சேனா அமைச்சர் ரிசாத் காடழித்தார் என சொல்வது மடமைத்தனமானதாகும்.
1990ம் ஆண்டு புலிகளால் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களின் வாழ்விடங்கள் முப்பது வருடங்களில் காடுபத்தாமல் இருக்குமா என்பது கூட புரியாதவர்கள் இந்நாட்டில் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்விடங்களை தாண்டி வில்பத்து காட்டுக்குள் குடியேறவில்லை என்பது தேசிய ஊடகங்களில் நிரூபிக்கப்பட்டு முடிவடைந்து விட்டது. ஆனாலும் டயஸ்போராவின் செல்வாக்கில் இயங்கும் தொலைக்காட்சி ஒன்று அமைச்சர் ரிசாதை குறி வைத்து வைக்கும் பொய் குற்றச்சாட்டுக்களை விழுங்கி பொதுபல சேனாவும் வாந்தி எடுத்துள்ளது.
அமைச்சர் ரிசாத் அறபு மொழியை வளர்ப்பதாக பொதுபல சேனா சொல்லியிருப்பது சிரிப்பை தருகிறது. அறபு மொழி முஸ்லிம்களின் சமய மொழியாகும். நமது நாட்டில் புழக்கத்தில் இல்லாத இந்தியாவின் பாளி மொழி பௌத்த சமய மொழியாக பயன்படுத்தப்படுவது போல் ஒவ்வொரு முஸ்லிமும் தனது சமய மொழியாக அறபு மொழியை கற்றுக்கொள்கிறான். அத்துடன் அறபு நாடுகளில் தொழில் செய்யும் சிங்களவர்கள் கூட அறபு மொழியை அழகாக பேசுகிறார்கள். ஞானசார தேரர் கூட அறபு நாட்டில் ஒரு வருடம் பணிபுரிந்தால் அறபு மொழியை அவரால் பேச முடியும். அதற்கு அமைச்சர் ரிசாத் தேவையில்லை.
அத்துடன் அறபு நாட்டு நிதி மூலம் அமைக்கப்பட்ட அகதிகளுக்கான வீட்டு திட்டத்தை ஜாசிம் சிட்டி என பெயர் வைத்துள்ளதால் ஜாசிம் என்பது அறபு பெயர் என்பதால் அறபை வளர்க்கிறார் என்றால் சிட்டி என்ற ஆங்கில வார்த்தையும் உள்ளதால் அமைச்சர் ரிசாத் ஆங்கிலத்தையும் வளர்க்கிறார் என சொல்ல முடியாதா? இதுவெல்லாம் சின்னத்தனமான கருத்துக்களாகும்.
வடமாகாண முஸ்லிம்களை மீள் குடியேற்றும் போது மாடி வீடுகளை அமைப்பது நல்லது என்ற பொதுபல சேனாவின் கருத்து பிழையானது. மாடி வீடுகள் என்பன நகரங்களுக்கு ஓரளவு பொருந்துமே தவிர காணி வளம் உள்ள கிராமங்களுக்கு சரிவராது. அவ்வாறு சரிவருமாயின் முதலில் வடக்கு கிழக்கில் மீள் குடியேறும் தமிழ் மக்களுக்கு அத்தகைய மாடிவீட்டு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என பொதுபல சேனா சொல்ல முன்வருமா என கேட்கின்றோம்.
அதே போல் சில முஸ்லிம்களால் அமைச்சர் ரிசாதுக்கெதிராக வழக்கு போடப்படுவதாக பொது பல சேனா சொல்லியுள்ளது. அவை அரசியல் ரீதியில் உள்ளதாகும். டயஸ்போராவின் கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சர் ஹக்கீமின் கட்சியை சேர்ந்த ஓரிரு நபர்கள் அமைச்சர் ரிசாத் மீது கொண்ட அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக முன் வைக்கும் பொய் குற்றச்சாட்டுகளாகும்.
ஆகவே டயஸ்போராக்களின் திட்டத்துக்கு மயங்கி பிரபாகரனை தலைவராகவும் அவரை ஒழித்த சிங்கள தலைவர்களையும் இரா ணுவத்தையும் வில்லன்களாக காட்டும் முயற்சிக்கு துணை போக வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
PUTHIYA KANDUPIDIPPU
ReplyDelete