Header Ads



ஜெருசலேத்திற்கு தனது தூதரகத்தை, மாற்றும் குவாட்டமாலா

இஸ்ரேலில் உள்ள தனது தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்ற திட்டமிட்டிருப்பதாக மத்திய அமெரிக்க நாடான குவாட்டமாலா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹூவுடன் பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டின் அதிபர் ஜிம்மி மொர்ராலெஸ் கூறினார்.

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த ஒன்பது நாடுகளில் குவாட்டமாலாவும் ஒன்று.

ஜெருசலேம் நகரத்துக்கு இஸ்ரேலும் பாலத்தீனமும் உரிமை கொண்டாடி வரும் நிலையில் இது ஒரு தீர்க்கப்படாத சர்ச்சையாகத் தொடர்ந்து வருகிறது.

முன்னதாக, ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் சர்ச்சைக்குள்ளாகிய முடிவுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், இஸ்லாமிய நாடுகள் இடையே பல போராட்டங்களை இம்முடிவு தூண்டியது.

இதுகுறித்து ஃபேஸ்புக்கில் அறிவிப்பு வெளியிட்ட அந்நாட்டு அதிபர் மொர்ராலெஸ், இஸ்ரேலுக்கும் குவாட்டமாலாவிற்கும் இடையே உள்ள "சிறந்த உறவை" குறிப்பிட்டு, நாட்டின் தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்றுவது முக்கியமான ஒன்று என்று கூறியுள்ளார்.

"எனவே, தூதரகத்தை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுக்க உத்தரவுகள் அளித்துள்ளேன்" என்றும் அவர் கூறினார். ஆனால் அது எப்போது நடக்கும் என்பது பற்றி எதுவும் கூறவில்லை.

உண்மையான நட்பின் அடையாளம் இது என்று குறிப்பிட்டுள்ள இஸ்ரேல், இந்த முடிவை வரவேற்றுள்ளது. ஆனால் இம்முடிவு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பாலத்தீன அதிபர் அப்பாஸ், இதனை எதிர்த்து போராடப் போவதாக கூறினார் என ஜெருசலேம் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது.

முன்னதாக, ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வெற்றி பெற்றது.

128 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தும், 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராகவும் வாக்களித்தன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்த தீர்மானத்தை ஆதரிப்பவர்களுக்கு நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்நிலையில் குவாட்டமாலா நாட்டிற்கு அமெரிக்கா பெரும் நன்கொடையாளராக இருக்க, இதனை எண்ணி தூதரக மாற்ற முடிவை அந்நாடு எடுத்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பல நாடுகள் தங்கள் தூதரங்களை ஜெருசலேத்துக்கு மாற்றும் முடிவை கருத்தில் கொண்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹூ சிஎன்என் தொலைக்காட்சியில் சமீபத்தில் தெரிவித்தார். ஆனால், எந்தெந்த நாடுகள் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

2 comments:

  1. வேறென்ன? குனிந்தால் நிதிகிடைக்கும் என்றால், குனிவோருக்கா பஞ்சம் ஏற்படப்போகின்றது???

    ReplyDelete

Powered by Blogger.