Header Ads



"சுயேட்சை குழு எனும், போர்வையில் அடிவருடிகள்"

சுயேட்சை குழு எனும் போர்வையில் களமிறக்கப்படும் சில கட்சிகளின் அடிவருடிகள், தமிழர்களின் தாய் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை உடைப்பதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறான குழுக்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் கூட்டமொன்று அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  

அவர் மேலும் கூறுகையில், 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடன் பயணிக்க வேண்டியது காலத்தின் தேவை என இன்று பலரும் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். இந்நிலையியல் பொருத்தமற்ற சில காரணங்களை கூறி மாற்றுக்கட்சிகளிடம் மண்டியிட்டுள்ள சிலர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி சுயேட்சை எனும் போர்வையில் தேர்தலில் போட்டியிட்டு தமிழர்களின் பலத்தை உடைப்பதற்கு முயற்சிக்கின்றனர்.  

இந்த முயற்சியானது ஒட்டுமொத்தமான தமிழர்களின் பலத்தை உடைப்பதாக அமைவதை அவர்கள் மறந்து செயல்படுகின்றார்களா? அல்லது வேண்டுமென்றே செயற்படுகின்றார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.   

இவ்வாறு கபடத்தனமான செயற்பாடுகளை இடைநிறுத்தி மற்றவர்களின் பணத்துக்கு அடிமையாகமால் செயற்படுமாறும் விடுதலை புலிகள் இருந்த காலத்தில் கூட்டமைப்புடன் பயணித்த அனைவரும் தற்போது விடுதலை புலிகள் இல்லை என நினைத்து தங்களுக்கு விரும்பியதுபோல் செயற்படுவதை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.  

இந்நிலையில் ஒற்றுமையை பலப்படுத்த வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் ஓர் அணியில் அணி திரள வேண்டும். குறிப்பாக அம்பாறை மாவட்ட தமிழர்கள் அனைவரும் காலத்தின் தேவை உணர்ந்து ஒரு குடையின் கீழ் ஒன்றுபட அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.  

அவ்வாறு ஒன்றினையாத அனைவருக்கும் மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார். 

No comments

Powered by Blogger.