வங்கி அதிகாரிகளாக நடித்து, வீட்டிலிருக்கும் பெண்களை ஏமாற்றியவர்கள் கைது
வங்கி ஒன்றின் அதிகாரிகள் என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, பெண்கள் பலரை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளைப் பெற்று மோசடி செய்து வந்த இருவரைக் கைது செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பு மற்றும் மினுவன்கொடை பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
வீடுகளில் தனிமையில் இருக்கும் பெண்களை இலக்கு வைத்தே இவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வங்கிச் சீட்டிழுப்பில் பரிசு கிடைத்துள்ளதாகவும் அதனைப் பெறுவதற்கு ஒரு தொகைப் பணத்தை வங்கியில் வைப்புச் செய்ய வேண்டும் என்றும் குறித்த பெண்களிடம் கூறி ஏமாற்றும் இவர்கள் அப்பெண்கள் தம்மிடம் பணம் இல்லை எனக் கூறும் சந்தர்ப்பங்களில் அவர்களிடமிருக்கும் நகைகளைப் பெற்றும் இவர்கள் இம்மோசடியில் ஈடுபட்டு வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விருவரும் 2013 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களால் பன்னல, குளியாப்பிட்டி, மாராவில மற்றும் மாதம்பை போன்ற பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பத்து மோசடிகளோடு தொடர்புடைய தங்க ஆபரணங்களையும் இவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மாதம்பை கல்முறுவ பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணை இவ்வாறு இவர்கள் ஏமாற்றி தங்க வளை யல் மற்றும் மோதிரத்தைப் பெற்றுக் கொண்டு சென்றமை தொடர் பில் விசாரணைகளை மேற்கொண்ட மாதம்பை பொலி ஸார் மாதம்பை பிரதேச வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கெமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து இச்சந்தேக நபர்கள் மாதம்பை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்ளை நேற்று முன்தினம் சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment