Header Ads



தேசியப் பட்டியல் வேண்டும், தக்பீர் முழக்கத்துடன் தீர்மானம் நிறைவேற்றம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப் பட்டியல் பாரளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கப்பட வேண்டும் என அட்டாளைச்சேனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவினால் மத்திய குழு உறுப்பினர்களின் தக்பீர் முழக்கத்துடன் ஏகமனதான தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுக்கூட்டமும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வது தொடர்பான கலந்துரையாடலும், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளருமான ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக முன்னாள் கிழக்கு மாகாண சபையின் அமைச்சரும், அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளருமான ஏ.எல்.எம். நஸீர் முன்வைத்தார்.

இதன் பின்னர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எஸ்.எம். உவைஸ், எஸ்.எல். முனாஸ், மத்திய குழுவின் உபதலைவர் எஸ்.எம்.எம். அமீன், மத்திய குழுவின் உறுப்பினர்களான எஸ்.எல்.எம்.ஏ.ஜப்பார், ஏ.பீ.அன்வர்,எம்.ஐ.சல்மான்,கே.எம்.அலி அஹமட் உட்பட பல உறுப்பினர்கள் இங்கு முன்வைத்த பல்வேறு கருத்துக்களின் படி இரு தீர்மானங்கள் மத்திய குழு உறுப்பினர்கள் எழுந்து நின்று தக்பீர் முழக்கத்துடன் ஏகமனதாக எடுக்கப்பட்டன.

அதாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தெடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு எமது தலைவரினால் ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப் பட்டியல் பாரளுமன்ற உறுப்பினர் பதவியை அட்டாளைச்சேனைக்கு வழங்க வேண்டும்.

இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான ஏ.எல்.எம். நஸீருக்கு வழங்குதல் வேண்டும்

நமது கட்சியின் தனித்துவத்தை பாதுகாக்கும் முகமாக நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிடல் வேண்டும் என்ற இரு தீர்மானங்கள் இங்கு உறுப்பினர்களால நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான யூ.எம். வாஹிட், றியா மசூர், அட்டாளைச்சேனை மத்திய குழுவின் செயலாளர் ஏ.சீ.எம்.ஹாரீத், மத்திய குழுவின் பொருளார் ஏ.எல்.ஏ.பத்தாஹ் உட்பட  மத்திய குழுவின் பதவி உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேற்படி இங்கு நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீமுக்கு மிக விரைவாக எழுத்து மூலம் சமர்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

( எம்.ஐ.எம். றியாஸ்)

No comments

Powered by Blogger.