மத்திய வங்கியை கைபற்ற, ஜனாதிபதி திட்டம்
மத்தியவங்கி உட்பட நிதித்துறையுடன் தொடர்புடைய முக்கிய சில அரச நிறுவனங்களைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய மத்தியவங்கி பிணை முறிமோசடி தொடர்பில் விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
அந்த அறிக்கை தனது கைக்குக்கிடைத்த பின்னரே, நிதி விவகாரத்துடன் தொடர்புடைய முக்கிய அரச திணைக்களங்களையும், நிறுவனங்களையும் தன்வசப்படுத்தும் அறிவிப்பை ஜனாதிபதி விடுக்கவுள்ளார் என்றும், தென்னிலங்கை அரசியல் களத்தில் பாரியதொரு புரட்சியை ஏற்படுத்தும் அறிவிப்பாக இது அமையுமென்றும் அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
கடந்தகாலங்களில் நிதி அமைச்சானது ஜனாதிபதி பதவியை வகிப்பவரின் கட்டுப்பாட்டின்கீழேயே இருந்தது. எனினும், ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஜனாதிபதியிடமிருந்து நிதி அமைச்சு விடுக்கப்பட்டது. அத்துடன், தேசியக்கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்கீழேயே மத்தியவங்கிஇருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்விரு அமைச்சுகள் தொடர்பிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின்கீழ் மத்தியவங்கி இருந்தால் பிணைமுறிபோன்ற மோசடிகள் இடம்பெறாது என்று சில உயர்மட்ட பிரமுகர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். இதன்பிரகாரமே மேற்படி மாற்றம் நிகழவுள்ளது.
Post a Comment