Header Ads



சுவிற்ஸர்லாந்தில் ஆவா குழுவின், முக்கிய தலைகள் - நாடுகடத்த ஏற்பாடு


யாழ்ப்பாணத்தில் நிலவும் அச்சுறுத்தலான நிலையின் பின்னணியில் வெளிநாட்டிலிருந்து வரும் பணம் தாக்கம் செலுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள ஆவா குழுவின் முக்கிய செயற்பட்டாளர்கள் தொடர்பில் தமக்கு இரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவி்த்துள்ளனர்.

யாழில் கடந்த காலத்தில் ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரான சன்னா என அழைக்கப்படும் பிரசன்னா தற்போது சுவிஸ் நாட்டில் உள்ளார். அவருடன் சுவிஸில் சேர்ந்து இயங்கும் சிலரே யாழில் இயங்கும் ஆவா குழுவுக்கு பண உதவிகளைச் செய்து வருவதாக இரகசிய தகவல்கள் மூலம் அறிந்துள்ளோம்.

அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு சுவிஸில் இருந்து குறித்த நபர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.

இதேவேளை ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளர்களான தேவா, பிரகாஸ் மற்றும் டானியல் ஆகிய மூவர் இந்தியாவில் திருச்சிப் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி நடமாடினார்கள் என திருச்சி கியூ பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களையும் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.

யாழ். குடாநாட்டிலும், கொழும்பு, வவுனியா பகுதிகளிலும் கைதான வாள்வெட்டுச் சந்தேகநபர்களிடம் வாள்கள், கோடரிகள், குண்டுகள் என்பன மீட்கப்பட்டிருந்தன.

இந்த ஆயுதங்கள் உடுவில் பகுதியில் உள்ள ஒருவர் மூலமாகவே சந்தேக நபர்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், இவற்றுக்கான பணம் சுவிற்ஸர்லாந்தில் உள்ள சன்னா என்பவர் மூலம் அனுப்பப்படுவதாகவும் பொலிஸாரின் தொடர்ச்சியான விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சன்னா என்பவர் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் கொலை ஒன்றைச் செய்து நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் சுவிற்ஸர்லாந்துக்குத் தப்பிச்சென்றுள்ளார்.

அவரை அங்கிருந்து சர்வதேசப் பொலிஸார் ஊடாக இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என்றார்.

No comments

Powered by Blogger.