Header Ads



காணாமல் போன ஷாலிஹ், உணவு விடுதியிலிருந்து மீட்பு

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் அண்மையில் காணாமல் போன சிறுவன் வெலிகந்தை கட்டுவன்வில பிரதேசத்தில் உள்ள உணவு விடுதியொன்றில் வேலை செய்து வந்த நிலையில் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர், கலைமகள் வித்தியாலய வீதி, ஹிதாயத் நகரைச் சேர்ந்த 15 வயதுடைய அப்துல் கரீம் ஹியாஸ் அப்துல் ஷாலிஹ் என்ற சிறுவன் கடந்த 13ஆம் திகதி இரவில் இருந்து காணாமல் போயிருந்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த சிறுவனின் பெற்றோர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் காணாமல்போன சிறுவனின் தந்தை குறிப்பிடுகையில்,

ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவன் வருட இறுதித் தவணை விடுமுறை கிடைத்ததும் நண்பர்களின் தூண்டுதலின்பேரில் வீட்டாருக்குத் தெரியாமல் தலைமறைவாகியிருந்தார் என தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு, தாம் தேடுதலிலும் ஈடுபட்டதாகவும் அதன் பின்னர் இவர் கட்டுவன்வில பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்வதாக தகவல் கிடைத்ததும் அங்கு சென்று அவரை மீட்டெடுத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை விடுமுறை காலங்களில் மாணவர்களை தமது கண்காணிப்பில் இருந்து மறையாத வண்ணம் அவதானத்துடன் இருக்குமாறு பெற்றோர்களுக்கு இதன்போது பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

1 comment:

  1. விடுதியிலேயே விட்டு விட்டு வந்திருக்கணும்...... வாழ்க்கை சரியான பாடம் கற்பித்திருக்கும்....

    ReplyDelete

Powered by Blogger.