Header Ads



விகாராதிபதின் உடலை எரிக்கலாம் - நீதிமன்றம் உத்தரவு


யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதின் உடலை தகனம் செய்வதற்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் அனுமதிவழங்கி உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலினை யாழ்.முற்றவெளிப் பகுதியில் தகனம்  செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி பொதுமகன் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எதிராளிகள் ஐவரையும் பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம்  கட்டளை பிறப்பித்துள்ளது.

குறித்த நாக விகாரையின் விகாரதிபதி மேகாஜதுரே ஜானரத்ன தேரர் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அவரது உடலினை இன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் தகனம் செய்வதற்கு யாழ்.இராணுவ படைத் தலமையகம் ஆரியகுள நாக விகாரையினருடன் இணைந்து ஏற்பாடுகளை முன்னெடுத்தது.

இந்நிலையில் குறித்த பகுதியில் யாழ்.கோட்டை தமிழர் ஆராய்ச்சி மாநாட்டின் நினைவுத் தூபி, பொது நூலகம், பொதுச் சந்தை மற்றும் முனீஸ்வரர் ஆலயம் என்பன உள்ள நிலையில் எரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி பொதுமகன் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கானது இன்று நண்பகல் 12.30 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது அவ் வழக்கின் இடை நகர்த்தல் பத்திரத்தின் மீதான விசாரனையின் போது குறித்த வழக்கின் எதிராளிகளான யாழ்.மாநகர சபை ஆணையாளர், யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர், யாழ்.மாநகர சபையின் சுகாதார பரிசோதகர், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, ஆரியகுள நாக விகாரையின் விகாராதிபதி ஆகியோரை மன்றில் முன்னிலையாகுமாறு  யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் கட்டளை பிறப்பித்திருந்த நிலையில் அனைவரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

வழக்குத் தொடுநர் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சாந்த அபிமன்யூ தலைமையில் 12 சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,

விகாராதிபதியின் உடல் எரிக்கப்படும் இடம் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான இடமெனவும் அங்கு விகாராதிபதியின் உடலை எரிப்பதற்கு அத் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் இறுதிக்கிரியைகளை இராணுவம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் மன்றில் முன்னிலையாகியிருந்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் வழக்குத் தொடுநர் தரப்பால் குறித்த பகுதியில் யாழ்.கோட்டை தமிழர் ஆராய்ச்சி மாநாட்டின் நினைவுத் தூபி, பொது நூலகம், பொதுச் சந்தை மற்றும் முனீஸ்வரர் ஆலயம் என்பன உள்ள நிலையில் எரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்ற நீதிவான் எஸ். சதீஸ்கரன், விகாராதிபதியின் உடலை அங்கு தகனம்செய்வதற்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

( ரி.விரூஷன்)

No comments

Powered by Blogger.